சிவிசி-சிஏஜியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை: வீரப்ப மொய்லி
டெல்லி: இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (Comptroller and Auditor General-CAG), தலைமை கண்காணிப்பு அதிகாரி (Central Vigilance Commission-CVC) ஆகியோரி்ன் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
மத்திய தகவல் ஆணைய மாநாட்டில் பேசிய அவர், ஊழல்-லஞ்ச விவகாரங்களை முன்கூட்டியே கண்டறிய முடியும். தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அலுவலகம் இதில் கவனம் செலுத்தினால் பல்வேறு முறைகேடுகளை தடுத்து நிறுத்த முடியும்.
ஆனால், எந்த நோக்கத்துக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறியதாகத் தெரியவில்லை. தனிப்பட்ட முறையில் எந்த ஊழல் விவகாரங்களையும் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அலுவலகம் இதுவரை கண்டுபிடித்ததாக சரித்திரமே இல்லை.
அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறும் உயரதிகாரிகள் பலர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அவர்கள், இந்தியாவின் பெருமையை சீர்குலைக்கும் வகையில் பேட்டியளிப்பது கண்டிக்கத்தக்கது.
வெளிநாட்டில் நிருபர்களிடம் பேசிய முன்னாள் தலைமை கண்காணிப்பு அதிகாரி பிரதியுஷ் சின்ஹா, மூன்று இந்தியர்களில் ஒருவர் ஊழல்வாதியாக இருக்கிறார் என்று தாய்நாடு குறித்து மிகவும் தரக் குறைவாகப் பேசியிருக்கிறார்.
தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரிப்பது வருத்தமளிக்கிறது. இந்த சமூகவிரோத செயலை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
குஜராத், மகாராஷ்டிரத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முறைகேடுகளை சுட்டிக் காட்டிய இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களில் அந்தந்த மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு அலுவலகங்களில் முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவோரின் ('Whistleblowers') நலனைப் பாதுகாக்கும் வகையில் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் மசோதா கொண்டு வரப்படும் என்றார் மொய்லி.