இலங்கையில் 60 பேர் பலியான வெடிவிபத்துக்கு முன்னாள் புலிகள் காரணமா?
கொழும்பு : இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு காவல் நிலையத்தில் நடந்த பயங்கர வெடிவிபத்துச் சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப் புலிகள் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக இலங்கை பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
அதேசமயம், இந்த சம்பவத்திற்கு விடுதலைப் புலிகள் காரணமில்லை, இதில் எந்த சதிச் செயலும் இல்லை என்றும் அது கூறியுள்ளது.
கரடியனாறு காவல் நிலையத்தில் டைனமைட்டுகள் வெடித்துச் சிதறியதில் 60 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் இருவர் சீனர்கள், மற்றவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்களர்கள். உயிரிழந்தவர்களில் பலர் முன்னாள் விடுதலைப் புலிகள் எனத் தற்போது தெரிய வந்துள்ளது.
இந்தத் தமிழர்களை சீன நிறுவனம் தனது சாலை மேம்பாட்டுப் பணியில் ஈடுபடுத்தியிருந்ததாம். வெடிவிபத்தில் இந்த தமிழர்களும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர்கள் அனைவரும் முன்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர்கள். போர் முடிந்த நிலையில் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கிக் கொண்டனர். இவர்களைத்தான் சாலைப் பணியில் ஈடுபடுத்தியிருந்தது இலங்கை பாதுகாப்புத் துறை.
இவர்கள்தான் ஒருவேளை வெடிகுண்டுகளை வெடிக்க வைத்திருக்கலாம் என்று தற்போது இலங்கை இணையதளங்களில் செய்திவெளியாகியுள்ளது. இந்த கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக பாதுகாப்புத்துறை கூறியுள்ளதாகவும் அந்த தமிழ் இணையதளங்கள் தெரிவித்துள்ளன.