'ஸ்பெக்ட்ரம்': ராசா தானாகவே பதவி விலக வேண்டும்- பாஜக
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா தானாகவே பதவி விலக வேண்டும் அல்லது அமைச்சரவையிலிருந்து அவரை பிரதமர் மன்மோகன் சிங் நீக்க வேண்டும் என்று பாஜக மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறுகையில்,
2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய அமைச்சர் ராசாவோடு சிபிஐ, அமலாக்க இயக்குநரகம், வருமானவரித் துறை ஆகியவற்றுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு பதிலளிக்க வழங்கபட்ட 10 நாள் அவகாசம் செவ்வாய்க்கிழமை முடிகிறது.
இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ திங்கள்கிழமை பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தது.
அதில், இந்த விஷயம் மிகவும் சிக்கலான தன்மை கொண்டதால் மிக ஆழமாக விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது. சிபிஐயே இப்படி கூறியுள்ளதால், இந்த பிரச்சனை மிகவும் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டிய வேண்டிய ஒன்றாகும்.
ராசா அமைச்சர் பதவியில் தொடர்ந்தால் சிபிஐ விசாரணை நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறாது. 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடுகள் அனைத்துக்கும் அமைச்சர் என்ற முறையில் ராசாவே பொறுப்பு. எனவே அவர் தானாகவே பதவி விலக வேண்டும் அல்லது அமைச்சரவையில் இருந்து அவரை பிரதமர் நீக்க வேண்டும்.
விசாரணை நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெற வேண்டுமானால் ராசா அந்தப் பதவியில் நீடிக்கக் கூடாது என்றார்.
காஷ்மீர்-8 அம்ச திட்டத்துக்கு பாஜக எதிர்ப்பு:
இதற்கிடையே காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த மத்திய அரசு அமலாக்கத் திட்டமிட்டுள்ள 8 அம்ச திட்டத்துக்கு பாஜக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
ராணுவ பாதுகாப்பு சிறப்பு சட்டத்தை சில இடங்களில் தளர்த்துவது, துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்குவது, கலவரத்தில் கைதானவர்களை விடுவிப்பது, அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது உள்ளிட்ட 8 அம்ச திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் தருண் விஜய் கூறுகையில்,
காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த கொண்டு வரப்பட்டுள்ள 8 அம்ச திட்டம் சரியானவை அல்ல. இது பாதுகாப்பு படையினரையும், தேசப்பற்றுள்ள மக்களையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.
2008ம் ஆண்டு அமர்நாத் போராட்டத்தின்போது ஜம்முவில் 17 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் குடும்பத்துக்கு கூட இதுவரை நஷ்டஈடு வழங்கவில்லை.
ஆனால் இப்போது பாதுகாப்பு படையினரை தாக்கியதால் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வீசி தாக்கியவர்களை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அமர்நாத் போராட்டத்தில் சம்பந்தப்பட்ட 50 பேர் மீது இன்னும் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications