டிரைவர், கண்டக்டர்கள் மீது திமுக கவுன்சிலர் மகன் தாக்குதல்: விஜயகாந்த் கண்டனம்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இன்று காலை சற்றும் எதிர்பாராத வகையில் அரசு மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகள் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதன் விளைவாக பேருந்துகளை பயன்படுத்தும் ஏழை, நடுத்தர மக்கள் வேலைக்கு போக முடியாமலும், பிள்ளைகளை பள்ளிக் கூடங்களுக்கு அனுப்ப முடியாமலும், நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமலும் பல வகையிலும் அவதிக்கு ஆளானார்கள்.
பலர் பேருந்துகளில் செல்லும்போழுது பாதி வழியில் இறங்கி விடப்பட்டார்கள்.
நேற்றிரவு அண்ணா நகரில் இருந்து ஆவடி நோக்கி சென்ற பேருந்தை ஆளும் கட்சியைச் சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர் அன்பு என்பவரின் மகன் செந்தில் காரில் அந்த பேருந்தை முந்த முயற்சித்த போது ஏற்பட்ட தகராறில் பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கியும், பின்னர் மாநகராட்சி கவுன்சிலர் மகன் என்ற அந்தஸ்ததைப் பயன்படுத்தி அந்த பகுதியில் உள்ள சமூக விரோதிகளை உடனடியாக அழைத்து இந்த பஸ் மட்டுமல்லாமல் வேறு 6 பஸ்களையும் கண்டபடி தாக்கி அவற்றில் இருந்த டிரைவர், கண்டக் டர்களையும் தாக்கி உள்ளனர்.
பஸ்களையும் சேதப்படுத்தி அவ்வழியே வந்த வாகனங்களையும் வழி மறித்து சேதப்படுத்தி உள்ளனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, உடனடியாக தலையிட்டு குற்றவாளிகளை கைது செய்திருந்தால் இந்த வேலை நிறுத்தத்தை தவிர்த்திருக்கலாம், குற்றம் புரிபவர்கள் ஆளும் கட்சியினர் என்பதனால் வழக்கம் போல் காவல்துறை கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துள்ளது.
ஒரு ஊழியருக்கு கண்ணிலும், இன்னொருவருக்கு கையிலும், மூன்றாமவருக்கு காலிலும் அடிபட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அனைத்து கட்சியைச் சேர்ந்த தொழிலாளர்களும், ஆத்திரம் அடைந்ததன் விளைவே இன்றைய தினம் பொதுமக்கள் துன்பத்திற்கு ஆளாக நேர்ந்தது. அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்கள் விரைவில் குணம் அடைய வேண்டுகிறேன்.
போக்குவரத்து ஊழியர்களை தாக்கும்படி தூண்டியவர்களையும், தாக்கியவர்களையும் தயவுதாட்சண்யம் இன்றி காவல் துறை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.












Click it and Unblock the Notifications