கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சி: ஆளுநர் பரிந்துரை
இகு குறித்து அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று கூடி விவாதிக்கிறது.
இதனால் தென் இந்தியாவில் அமைந்த முதல் பாஜக அரசு அற்ப ஆயுளிலேயே டிஸ்மிஸ் ஆகும் நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து பெங்களூர் உள்பட மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கர்நாடக முதல்வர் எதியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரை பதவிநீக்கம் செய்து இன்று காலை சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவை நுழைவாயிலில் நிறுத்தப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அங்கிருந்த ஜன்னல் கண்ணாடிகள் நொறுக்கினர். இந்த கலவரம் நடந்து கொண்டிருக்கும்போதே, சட்டப் பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், எதியூரப்பா தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றதாக சாபாநாயகர் அறிவித்தார்.
அப்போது மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் தேகவுடா மகன் ரேவண்ணா தலைமையில் அதிருப்தி எம்எல்எக்கள் சட்டப் பேரவைக்குள் நுழைந்தனர். தடையை மீறி உள்ளே நுழைந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் அவை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது அதிருப்தி எம்எல்ஏக்கள் தாக்கியதில் அவைக் காவலர் ஒருவர் மயங்கி விழுந்தார். பின்னர் அதிருப்தி எம்எல்ஏக்கள் உள்ளே நுழைந்தனர்.
கர்நாடக சட்டசபையில் ஏற்பட்டுள்ள பெரும் அமளியை தொடர்ந்து சட்டசபை பாதுகாப்புக்காக போலீசார் வரவழைக்கப்பட்டனர். அசம்பாவிதங்கள் ஏற்படும் பட்சத்தில் அவசர நிலையை சமாளிப்பதற்காக ஆம்புலன்ஸ்களும் சட்டசபை வளாகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுடன், எதிர்க்கட்சியினர் ஆளுநரை சந்திக்க, அவரது வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது 208 எம்எல்ஏக்களுடன் குரல் வாக்கெடுப்பு நடந்தது செல்லாது என அவர்கள் வலியுறுத்தினர். மேலும் எடியூரப்பா அரசை டிஸ்மிஸ் செய்ய ஆளுனரிடம் வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
மத்திய அரசுக்கு கடிதம்!
இந்நிலையில் கர்நாடக சட்டசபை ரகளை குறித்து மத்திய அரசுக்கு கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் அறிக்கை அனுப்பியுள்ளார். தனது ஆட்சேபணையையும் மீறி அதிருப்தி எம்எல்ஏக்களை சபாநாயகர் நீக்கியதாக அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
16 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு வாக்கெடுப்பு நடத்தியது சட்ட விரோதமானது என்றும், எம்எல்ஏக்கள் கட்சிக்கு எதிராக வாக்களிக்காத நிலையிலேயே அவர்களை சஸ்பெண்ட் செய்தது தவறு என்றும் கூறியுள்ள பரத்வாஜ், கர்நாடக அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமலாக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.
இதன்மீது மத்திய அமைச்சரவை இன்று முடிவெடக்கவுள்ளது. ஆளுநரின் இந்த அறிக்கையின் பேரில் எதியூரப்பா அரசு டிஸ்மிஸ் ஆகலாம் அல்லது குறைந்தபட்சம் சட்டசபை முடக்கப்படலாம் என்று தெரிகிறது.
கவர்னரை மாற்றுங்கள்!
ஆனால் முதல்வர் எதியூரப்பாவோ, கவர்னர் பரத்வாஜ் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு ஆளுநர் பரத்வாஜை திரும்பப் பெற வேண்டும் என்றும் புதிய ஆளுநர் நியமித்து நிர்வாகம் அமைதியாக நடக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
சபாநாயகர் உத்தரவுக்கு தடை கோரி வழக்கு:
இதற்கிடையே அரசை எதி்ர்த்து வாக்களித்தால் தான், கட்சித் தாவல் தடைச் சட்டப்படி எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்ய முடியும் என்ற விதியை மீறி, வாக்கெடுப்பு நடக்கும் முன்பே எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்துள்ளார் சபாநாயகர் போபைய்யா. இது சட்ட விரோதமான செயல் என்று அறிவிக்கக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அதில் பாஜக அரசுக்கு ஆதரவாக முன்னாள் செலிசிட்டர் ஜெனரல் சோலி சோராப்ஜி ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நாளைக்கு ஒததி வைக்கப்பட்டுள்ளது.