மியான்மர் ஜனநாயகத் தலைவி ஆங் சென் சூகியி விடுதலையாகிறார்-உத்தரவில் அரசு கையெழுத்திட்டதாக தகவல்
65 வயதாகும் ஆங் சென் பல வருடங்களாக வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்யுமாறு ஐ.நா. முதல் அனைத்து உலக நாடுகளும் தொடர்ந்து கோரி வரும் நிலையிலும் அதுகுறித்து கண்டுகொள்ளாமலேயே இருந்து வருகிறது மியான்மர் ராணுவ அரசு.
இந்த நிலையில் மியான்மர் தேர்தலுக்குப் பின்னர் ஆங் சென் விடுதலை செய்யப்படுவார் என ராணுவ அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் இதை யாருமே நம்பவில்லை. வழக்கம் போல இவ்வாறு கூறி விட்டு பின்னர் மீண்டும் ஆங்சென்னை சிறையில் அடைத்து விடும் என்றே அனைவரும் கருதி வருகின்றனர்.
இந்த நிலையில் நோபல் பரிசு பெற்ற ஆங் சென் நிச்சயம் விடுதலை செய்யப்படுவார் என்று தற்போது மியான்மரிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளையுடன் அவரது வீட்டுச் சிறைவாசம் முடிவடைகிறது. அதன் பின்னர் அவர் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவார் என்றும், அவரது விடுதலையையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வசித்து வரும் முன்னாள் அதிருப்தித் தலைவரும், தற்போது கல்வியாளராக இருப்பவருமான மாங் ஜர்னி கூறுகையில், சூகியின் விடுதலை மியான்மர் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை மேலும் வீறு கொண்டெழ வைக்க உதவும்.
ஒடுக்கப்பட்ட எதிர்க்கட்சியினருக்கு இது ஊக்கமாக அமையும். எனவே சூகியியின் விடுதலையை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறோம் என்றார்.
முன்னதாக சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராணுவ சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆதரவு பெற்ற கட்சிகளுக்கு பெரும்பான்மை தொகுதிகள் கிடைத்திருப்பதால் மீண்டும் சர்வாதிகார ஆட்சியே தொடரப் போகிறது.
சூகியி விடுதலை செய்யப்பட்டாலும் கூட அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அவர் தீவிர அரசியலில் இறங்கினால் மீண்டும் ராணுவத்தால் கைது செய்யப்படக் கூடிய நிலையே தற்போது உள்ளதாக கூறப்படுகிறது. எனவே சூகியை விடுதலை செய்யும் ராணுவ அரசின் முடிவு ஒரு கண் துடைப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
சூகியியின் கட்சியான தேசிய ஜனநாயக லீக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மறுத்து விட்டதால் கட்சிக்கான அங்கீகாரத்தை ராணுவ அரசின் தேர்தல் ஆணையம் ரத்து செய்து விட்டது. இருப்பினும் இந்தக் கட்சிக்கே மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருப்பதால் மீண்டும் கட்சியை புதுப்பிக்க சூகியி முயல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூகியி விடுதலை செய்யப்படுவார் என்று தகவல் பரவி வருவதால் தலைநகர் யாங்கோனில் உள்ள சூகியி கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
இதற்கிடையே, எந்தவித நிபந்தனையும் இல்லாத விடுதலையை மட்டுமே சூகியி ஏற்பார் என்று அவரது வக்கீல்தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் அவர் யாங்கோனை விட்டு வெளியேறக் கூடாது என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டு பின்னர் மீண்டும் கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூகியி விடுதலையைத் தொடர்ந்து அவரது இளைய மகன் கிம் ஆரிஸ் பிரிட்டனிலிருந்து மியான்மர் வந்துள்ளார். இவருக்கு சமீபத்தில்தான் மியான்மர் அரசு விசா அளித்து உத்தரவிட்டது நினைவிருக்கலாம். 33 வயதாகும் ஆரிஸ், தனது தாயைப் பார்க்க அனுமதி கோரி கடந்த பல வருடங்களாக முயற்சித்து வந்தார். ஆனால் மியான்மர் அரசு அனுமதி தராமேலேய இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.