காங்கிரசுக்கு ஜெ. திடீர் 'ஜால்ரா'-சிபிஎம் மறைமுக எதிர்ப்பு
சென்னை: காங்கிரஸுக்கு ஆதரவு தருவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளது மக்கள் நலனுக்கு உகந்ததாக இருக்காது என்று 'சுற்றி வளைத்து' கருத்து தெரிவித்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதா இல்லையா என்பதிலேயே தெளிவான நிலை இல்லை. இந்த விஷயத்தில் குழப்பமான நிலையை எடுத்துள்ள அக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
-ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 1,76,000 கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இந்த முறைகேட்டில் மத்திய அமைச்சர் ஆ.ராசா சம்பந்தப்பட்டுள்ளார் என்றும் மத்திய தலைமை கணக்கு தணிக்கைத்துறை அறிக்கை தெளிவாக கூறுகிறது.
இந்நிலையில், ராசாவை மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க. விலக்கிக்கொண்டால், தனது கட்சி மத்திய அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்குமென அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மத்திய அரசினுடைய மக்கள் விரோத கொள்கையை எதிர்த்து நாடு தழுவிய அளவில் 2010 ஏப்ரல் 27 அன்றும், 2010 ஜுலை 5 அன்றும் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் இடதுசாரி கட்சிகளோடு இணைந்து தமிழகத்தில் அ.தி.மு.கவும் பங்குபெற்றது.
தற்போது மக்கள் நலனுக்கும், தேச நலனுக்கும் விரோதமாக செயல்படும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசை ஆதரிக்க தயார் என்று அ.தி.மு.க. தலைமை அறிவித்திருப்பது, ஏற்கனவே அ.தி.மு.க. எடுத்த நிலைபாட்டிற்கு முரணாக உள்ளது. இது மக்கள் நலனை பாதுகாக்க உதவாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
- மத்திய ஆட்சியில் இடம்பெற்றுள்ள தி.மு.க., மத்திய அரசு கடைப்பிடிக்கும் தவறான பொருளாதாரக் கொள்கையை முழுமையாக ஆதரிப்பதோடு தமிழகத்திலும் அதே கொள்கையை அமலாக்கி வருகிறது.
- சத்துணவு, அங்கன்வாடி, டாஸ்மாக் ஊழியர்கள் போராடியபோது அவர்கள் மீது அரசின் அடக்குமுறை ஏவிவிடப்பட்டது, திருப்பெரும்புதுÖர் பகுதியில் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் உரிமை கோரி போராடுகிறபோது, போராட்டத்தை ஒடுக்குவதோடு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாகவே தி.மு.க. அரசு நடந்துகொள்கிறது. இத்தகைய மக்கள் விரோத-தொழிலாளர் விரோத தி.மு.க. அரசை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.
- மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோதக்கொள்கையை எதிர்த்து, உழைப்பாளி மக்களின் நலன்காக்க மார்க்சிஸ்ட் கம்iனிஸ்டு கட்சி தொடர்ந்து சுயேச்சையாகவும், இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளோடு இணைந்து கூட்டாகவும் இயக்கங்களை முன்னெடுத்துச் செல்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.