ராகுல்காந்தி பேரவை கூண்டோடு கலைப்பு!-ஜெகன் அதிரடி
ஹைதராபாத்: காங்கிரஸிலிருந்து விலகிய ஜெகன் மோகன் ரெட்டி தனது அதிரடியை ஆரம்பித்துவிட்டார்.
முதல் வேலையாக ராகுல் காந்தி பேரவை என்ற பெயரில் இயங்கிவந்த வலுவான இளைஞர் காங்கிரஸ் அமைப்பே கூண்டோடு கலைந்து போகும் அளவு, அதிலிருந்த மொத்த பேரையும் தனது ஒஎஸ்ஆர் காங்கிரஸில் இணைத்துள்ளார்!
ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆந்திராவில் ஆதரவுபெருகி வருகிறது. ஏராளமான மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகள் காங்கிரசில் இருந்து விலகி ஜெகன்மோகன் ரெட்டி அணியில் சேர்ந்து வருகிறார்கள்.
ஹைதராபாத்தில் ராகுல் காந்தி இளைஞர் அணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஜெகன் மோகனை ஆதரிக்கிறார்கள். அவர்கள் நேற்று ராகுல் காந்தி இளைஞர் அணியை கூண்டோடு கலைத்து விட்டு ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில் அவரது அணியில் சேர்ந்தனர்.
அவர்கள் கூறும் போது, "ஜெகன் மோகன் ரெட்டி மிகவும் திறமையானவர். ஏழை-எளிய மக்களுடன் நெருங்கி பழகுவார். அவர்தான் எங்களை ராகுல்காந்தி பேரவையில் செயல்பட ஊக்கம் தந்துவந்தார். இப்போது அவரே காங்கிரஸில் இல்லாதபோது எங்களுக்கு என்ன வேலை.
மத்தியில் காங்கிரசை ஆட்சியில் அமர வைத்த மாநிலம் ஆந்திராதான். ராஜசேகர ரெட்டி இருந்தவரை ஆந்திராவை அதிசயமாகப் பார்த்தது உலகம். ஆனால் காங்கிரஸ் மேலிடம் ஆந்திராவில் திறமை இல்லாத முதல்வர்களை நியமித்து மாநிலத்தின் இமெஜையே நமாசமாக்கிவிட்டது.
இதை இனி நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஜெகன் போன்ற திறமையான முதல்வரை நாங்களே தேர்ந்தெடுத்து விடுவோம்," என்றனர்.
ஜெகன்மோகன் ரெட்டியை அனகாபள்ளி காங்கிரஸ் எம்.பி. சப்பம் ஹரி நேற்று சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். மேற்கு கோதாவரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் மகேன் ராஜு தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜெகன் அணியில் சேர்ந்தார்.
இதே போல் ஏராளமான முக்கிய நிர்வாகிகள் ஜெகன் அணியில் இணைந்து வருவ தால் காங்கிரஸ் கூடாரம் காலியாகி வருகிறது. இதனால் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கிராமப்புற மக்கள் மத்தியிலும் ஜெகனுக்கே பெரும் செல்வாக்கு இருப்பதாக சமீபத்திய பத்திரிகை கணிப்பும் தெரிவித்துள்ளதால் பெரும் கவலையில் உள்ளது காங்கிரஸ் மேலிடம்.
புறக்கணிக்கப்படும் விவேகானந்த ரெட்டி:
ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரஸை விட்டு விலகினாலும், அவரது தந்தை ராஜசேகர ரெட்டியின் சகோதரர் விவேகானந்த ரெட்டி இன்னும் காங்கிரஸில் தான் இருக்கிறார்.
சமீபத்தில் இவருக்கு அமைச்சர் பதவியும் தரப்பட்டது. இதற்கு ஜெகன் ஆதரவாளர்களும், அவரது சொந்த ஊரான புலிவெந்தலா மக்களும் கடும் எதிர்பபு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அமைச்சராக பதவியேற்ற பிறகு முதன் முறையாக அவர் புலிவெந்தலா சென்றார். ஆனால் அவரை வரவேற்க யாருமே வரவில்லை. இருப்பினும் அவர் தனது சகோதரர் ராஜசேகர ரெட்டி சிலைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், என் அண்ணனின் கனவை நனவாக்க தீவிரமாக செயல்படுவேன். ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கு இயன்ற வரை பாடுபடுவேன் என்றார்.