ஸ்பெக்ட்ரம்: ராசாவின் சென்னை-டெல்லி-பெரம்பலூர் வீடுகளில் சிபிஐ சோதனை: உறவினர் வீடுகளிலும்!
அதே போல தொலைத் தொடர்புத்துறையின் நான்கு முன்னாள் மூத்த அதிகாரிகளின் வீடுகளிலும் ரெய்ட் நடத்தியது. ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை என்று சிபிஐ இயக்குனர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மோதிலால் நேரு மார்க்கில் ராசாவின் வீட்டிலும், சென்னை வீட்டிலும், நீலகிரி வீட்டிலும் மற்றும் சென்னை ஆர்.ஏ.புரம், ஆல்வார்பேட், நந்தனம், கோவை, நீலகிரி ஆகிய இடங்களில் உள்ள ராஜாவின் உறவினர்கள், நண்பர்கள், அவரது பினாமியாக இருக்கலாம என்று சந்தேகிக்கப்படுபவர்கள் ஆகியோரது வீடுகளிலும் இந்த சோதனை நடந்தது.
அதே போல பெரம்பலூர் சத்திரைமனைவேலூரில் உள்ள ராசாவின் வீடு, பெரம்பலூரில் உள்ள ராசாவின் அக்கா கமலாவின் வீடு, லாடபுரத்தில் உள்ள ராசாவுடைய மாமியாரின் வீடு, பெரம்பலூர் அருகே உள்ள ராசாவின் சொந்த ஊரான சக்கரமனைவேலூரில் உள்ள அவரது அண்ணன் கலியபெருமாள் வீட்டிலும்,
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள ராசாவின் அப்பா பெயரில் இயங்கும் ஆண்டிமுத்து சின்னபிள்ளை அறக்கட்டளை அலுவலகம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ராசாவின் மாமனார் அய்யாக்கண்ணு வீடு ஆகிய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
அதே போல ராசாவின் தனிச் செயலராக இருந்த மூத்த அதிகாரி சந்தோலியா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் பெகுரியா, தொலைத் தொடர்புத்துறையின் உறுப்பினரான ஸ்ரீதரா, துணை இயக்குநர் ஆர்.கே.ஸ்ரீவத்சவா ஆகியோரின் டெல்லி வீடுகளில் இந்தச் சோதனைகள் நடந்தன.
டெல்லி, சென்னை, பெரம்பலூர் உள்பட மொத்தம் 14க்கும் அதிகமான இடங்களில் இன்று காலை 7 மணிக்கு இந்தச் சோதனைகள் ஒரே நேரத்தில் தொடங்கின. பிற்பகலில் சோதனைகள் முடிவடைந்தன.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ராசாவை இதுவரை ஒரு கேள்வி கூட கேட்காமல் இருப்பது ஏன் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் சிபிஐயை கடுமையாக சாடியிருந்தது நினைவிருக்கலாம். இந்தப் பின்னணியில் இந்த ரெய்டுகள் நடந்துள்ளன.
2008ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தொலைத் தொடர்புத் துறை செயலாளராக பதவியேற்றவர் பஹுரா. அவரது வீட்டை சோதனையிட்ட சிபிஐ அதிகாரிகள் அவரிடம் சரமாரியாக கேள்விகளைக் கேட்டு விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
ஏற்கனவே ராஜாவின் முதன்மைச் செயலாளராக இருந்து வந்த சந்தோலியாவை அமலாக்கப் பிரவு அதிகாரிகள் துருவித் துருவி சமீபத்தில் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தற்போது அவர் சிபிஐ விசாரணைக்குட்பட்டுள்ளார்.
சோதனைக்குள்ளாகியுள்ள ஸ்ரீவத்சவா, 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வழங்கும் பிரிவுக்குத் தலைவராக இருந்தவர். இதனால் அவரும் விசாரணைக்குள்ளாகியுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி 2ஜி ஊழல் தொடர்பான வழக்கை சிபிஐ பதிவு செய்தது. அதன் பின்னர் இப்போதுதான் அது ராஜாவை நெருங்கி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.