ராசா மிரட்டியதாக நீதிபதி எனக்கு கடிதம் எழுதவில்லை-கே.ஜி.பாலகிருஷ்ணன்
மருத்துவக் கல்லூரியில் போலி மதிப்பெண் பட்டியலை தாக்கல் செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவருக்கும், அவரது தந்தைக்கும் ஜாமீன் வழங்கக் கூறி மத்திய அமைச்சர் ஒருவர் தனக்கு மிரட்டல் விடுத்ததாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி நீதிமன்றத்திலேயே தெரிவித்து பரபரப்பை ஏற்படு்த்தினார்.
ஆனால், அந்த அமைச்சர் யார் என்பது குறித்து அப்போது விவரம் தெரிவிக்க நீதிபதி மறுத்துவிட்டார். இந் நிலையில் அந்த அமைச்சர் ராசா தான் என்று சென்னை உயர் நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது.
மேலும் அப்போது இந்த விவகாரம் தொடர்பாக கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு ரகுபதி கடிதம் எழுதியதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதை கே.ஜி.பாலகிருஷ்ணன் மறுத்துள்ளார்.
தனக்கு நீதிபதி ரகுபதியிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை. அமைச்சர் மிரட்டியதாக கூறி அவர் கடிதம் எதையும் அனுப்பவில்லை என்று கே.ஜி.பாலகிருஷ்ணன் விளக்கியுள்ளார்.