3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக 120 அடியைத் தாண்டியது மேட்டூர் அணை
மேட்டூர்: 3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியைத் தாண்டியுள்ளது. இதையடுத்து பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் ஆர்வத்தோடு அணை நிரம்பி வழிவதை வேடிக்கை பார்த்து மகிழ்ந்தனர்.
நேற்று மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவை எட்டியது. இதுகுறித்து சேலம் கோட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரசேகரன் கூறுகையில், நீர் வரத்து திருப்திகரமான வகையில் உள்ளது. வரும் ஆண்டில் எந்தவித பற்றாக்குறையும் ஏற்படாத அளவுக்கு நிலைமை உள்ளது.
தற்போது உள்ள நீரை வைத்து ஒரு ஆண்டுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும். எனவே 2011ம் ஆண்டு பற்றாக்குறை ஏற்படாது என்று உறுதியாக நம்புகிறோம் என்றார்.
காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் உயிர் நாடியே மேட்டூர் அணைதான். கிட்டத்தட்ட 2 லட்சத்து 71 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை வளப்படுத்தி வருகிறது மேட்டூர் அணை.
ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம் ஆகிய மாவட்டங்களின் பாசனப் பகுதிகள் மேட்டூர் அணையை நம்பியுள்ளன.
கடைசியாக 2007ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. அதன் பின்னர் இப்போதுதான் அது நிரம்பியுள்ளது. அணையின் 76 ஆண்டு கால வரலாற்றில் முழுக் கொள்ளளவை எட்டியிருப்பது இது 37வது முறையாகும்.
விவசாயத்திற்கு மட்டுமல்லாமல், இந்த அணையிலிருந்து 32 மெகாவாட் மின்சாரமும் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கனரக வாகனங்கள் செல்லத் தடை- மாவட்ட ஆட்சியர்
மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதன் உச்சத்தை எட்டியிருப்பதால் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ஜே. சந்திரகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
கன மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120.5 அடியைத் எட்டியுள்ளது. அதன் அதிகபட்சக் கொள்ளளவு 120 அடியாகும்.
எனவே, பாதுகாப்புக் காரணங்கள் கருதி லாரிகள், பேருந்துகள், கேரளா மற்றும் கர்நாடகாவிலிருந்து வரும் சுற்றுலாப் பேருந்துகள் அந்த வழியே செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.