கன்னியாகுமரி, தூத்துக்குடியில் வெளுத்துக் கட்டும் மழை-பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நாகர்கோவில்: வட தமிழகத்தை உலுக்கி வந்த புயல் சின்னம் ஆந்திராவுக்குப் போய் விட்ட நிலையில் தற்போது தென் கோடி மாவட்டங்களான கன்னியாகுமரியிலும், தூத்துக்குடியிலும் கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து இரு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கும், குமரியில் மட்டும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக அதிகரித்துள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் 126 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 95 அடியாக இருக்கிறது.
இந்நிலையில் இன்றும் கனமழை நீடிக்கிறது. குற்றாலம் ஐந்தருவில் தண்ணீர் அதிகமாக கொட்டுவதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை, தென்காசி, கடைய நல்லூர், வடகரை, அச்சம்புதூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சங்கரன் கோவில், சிவகிரி, சேந்தன்மரம், ஆலங்குளம், கடையம், பொட்டல்புதூர், ஆழ்வார்குறிச்சி, சேரன்மகாதேவி, களக்காடு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தூத்துக்குடியில் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், மழை காரணமாக குழித்துறையில் நிறுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலிக்கு இந்த ரயில் காலை 7:50 மணிக்கு வரவேண்டும்; அது உரிய நேரத்தில் வராததால், பயணிகள் பரிதவித்துள்ளனர். இதேபோல் கன்னியாகுமரியிலிருந்து மும்பை செல்லும் ரயில், மதுரை - கொல்லம் ரயில் ஆகியவையும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications