கல்விக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு-சார்லஸ் காரைத் தாக்கிய லண்டன் மாணவர்கள்
சார்லஸும், கமீலாவும் ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு போராட்டம் நடத்திக் கொண்டிருந்த மாணவர்கள் காரைச் சூழ்நது கொண்டு தாக்கினர்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பல்கலைக்கழக கல்விக் கட்டணத்தை மும்மடங்காக உயர்த்தி சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
லண்டன் வெஸ்ட் என்ட் பகுதியில் பிரமாண்ட பேரணியை அவர்கள் வியாழக்கிழமை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது சார்லஸின் கார் வருவதைப் பார்த்த மாணவர்களில் ஒரு பிரிவினர் காரை நோக்கி ஓடினர். இதையடுத்துஅவர்களை போலீஸார் தடுத்துநிறுத்த முயற்சித்தனர்.
கிட்டத்தட்ட 20 பேர் சார்லஸ், கமீலா இருந்த காரை சூழ்ந்து கொண்டனர். பின்னர் கார் மீது பாட்டில்கள் உள்ளிட்டவற்றை எறிந்து தாக்கினர். அப்போது அவர்களில் சிலர் சார்லஸின் தலையை வெட்டுத் தூக்கிப் போட்டு என்று ஆவேசமாக கூக்குரலிட்டனர். இந்தத் தாக்குதலில் காரின் கண்ணாடிகள் உடைந்தன.
அப்போது சிலர் கார் கதவைத் திறந்து உள்ளே புக முயன்றதால் பரபரப்பு கூடியது. காருக்குள் இருந்த சார்லஸும், கமீலாவும் மிகவும் பீதியடைந்த முகத்துடன் இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த அட்னான் நஸீர் என்பவர் தெரிவித்தார். சில மாணவர்கள் காரை தங்களது கால்களால் உதைத்தனர்.
இந்த அமளி சில நிமிடங்கள் நீடித்தது. பின்னர் போலீஸார் மிகுந்த சிரமப்பட்டு கும்பலை கலைத்து காரை அங்கிருந்து போகச் செய்தனர்.
இந்தத் தாக்குதலில் சார்லஸும், கமீலாவும் காயமடையவில்லை என்று சார்லஸின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தால் சார்லஸை விட 63 வயதாகும் கமீலாதான் பெரும் அதிர்ச்சி அடைந்தாராம்.
தாக்குதலிலிருந்து தப்பி மீண்ட சார்லஸ் ஜோடி பின்னர் திட்டமிட்டபடி அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது. பதட்டத்தை மறைத்துக் கொண்டு அங்கு நடந்த கலை நிகழ்ச்சியையும் ரசித்துப் பார்த்தது.