முழுமையாக அகன்றது காற்றழுத்தம்-தமிழகத்தில் மழை குறையும்
இதுகுறித்து சென்னைவானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழகத்தில் லேசான மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்து வந்த கன மழை சற்று ஓய்ந்துள்ளது. இருப்பினும் சில மாவட்டங்களில் இரவு நேர கன மழை காணப்பட்டது.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக மதுரையில் 3 செமீ மழை பய்துள்ளது. இதேபோல வானியம்பாடி, இரணியல், மயிலாடி, மெலட்டூர், திருப்பத்தூர், கொளச்சல், நாகர்கோவில் ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.
12ம் தேதி காலை வரைக்குமான வானிலை முன்னெச்சரிக்கை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.
சென்னை நகருக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படலாம்.
அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படு்ம். சில இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், லேசான மழையை எதிர்பார்க்கலாம்.
அடுத்த 2 நாட்களுக்கு தமிழக வானிலையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மதுரையில் விடிய விடிய மழை:
இதற்கிடையே, மதுரையில் நேற்று இரவு விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. மதுரையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து இரவு நேரத்தில் மழை கொட்டி வருகிறது. பகலில் வெயிலும், இரவில் மழையுமாக இருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
குமரியில் வெள்ளம்: 100 கிராமங்கள் துண்டிப்பு -மீ்ட்பு பணியில் ராணுவம்
இதற்கிடையே, கனமழை மற்றும் வெள்ளத்தால் குமரி மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் மக்கள் தொடர்ந்து தத்தளித்து வருகின்றனர். ராணுவ வீரர்கள் மீட்பு மற்றும் புனரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறு, குளங்கள் நிரம்பியுள்ளன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் அதிகரித்தை ஒட்டி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஆறுகளில் வெள்ளம் பாய்ந்தோடியதால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. பேச்சிப்பாறை, திருவட்டார், ஆற்றூர், திற்பரப்பு, குழித்துறை, பூதப்பாண்டி, ஏழுதேசம், ஒழுகினசேரி, பறக்கை, சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏழுதேசம் பேரூராட்சி பகுதியில் வைக்கநல்லூர், வாவறை ஊராட்சி பள்ளிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. அந்த பகுதி மக்கள் வீடுகளின் மொட்டை மாடிகளில் நின்று கொண்டனர். அப்பகுதியில் உள்ள மக்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் அருகில் உள்ள பகுதியில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மாவட்டத்தில் பஸ், ரயில் போக்குவரத்து சீரடைந்துள்ளது. அதே சமயத்தில் நாகர்கோவில்-கன்னியாகுமரி வழிதடத்தில் சுசீந்திரம் பகுதியில் உள்ள ரயில் பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.