வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி-மீண்டும் தமிழகத்தில் பரவலாக மழை
சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளிலும் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக மழை பெய்துள்ளது. இந்த மழை 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இயல்பான அளவை விட சற்றுக் குறைவாகவே பெய்துள்ளது. அதேசமயம், காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் உள்ளிட்டவற்றில் நன்கு பெய்துள்ளது. அதேசமயம், பொதுவாக இந்த ஆண்டு வட கிழக்குப் பருவமழை சராசரி அளவுக்குப் பெய்துள்ள போதிலும் பெரிய அளவில் இல்லை என்றே கூறலாம்.
வட கிழக்குப் பருவ மழைக் காலம் டிசம்பர் மாதம் முடிய உள்ளது. ஆனால் தற்போது சென்னை உள்பட பல பகுதிகளில் பனி கொட்டத் தொடங்கி விட்டது. வழக்கமாக பனி வந்தால மழை வராது என்பார்கள். எனவே வட கிழக்குப் பருவ மழைக் காலம் முடியும் முன்பே பனி பெய்யத் தொடங்கியுள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
தற்போது கார்த்திகை நடக்கிறது. டிசம்பர் 16ம் தேதி பனி மாதமான மார்கழி தொடங்குகிறது. எனவே இப்போது பனி பெய்யத் தொடங்கியுள்ளதால் இனி மழை அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் நேற்று முதல் பனிப் பொழிவு தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் மாலையிலிருந்தே கடும் பனியாக காணப்பட்டது. அதேபோல நேற்றும் பனிப்பொழிவு காணப்பட்டது. இன்று காலையிலும் வானம் மேகமூட்டமாக இருந்தபோதிலும் பனியின் தாக்கம் காணப்பட்டது.
தமிழகத்தில் மழை இனி எப்படி இருக்கும் என்று ரமணனிடம் கேட்டபோது, தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையில் சில பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.
சில நேரங்களில் டிசம்பர் மாதம் முடியும் வரையிலும் கூட தமிழகத்தில் மழை கொட்டித் தீர்த்த சம்பவங்களும் நடந்ததுண்டு. எனவே இன்னும் ஓரிரு மழை பெய்யலாம் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது.
இதுகுறித்து இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக ஆரணியில் 6 செமீ மழை பெய்துள்ளது. சிவகாசி 3, செம்பரம்பாக்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், குடவாசல், மதுக்கூர், வத்திராயிருப்பு தலா 2, மனமேல்குடி, காஞ்சிபுரம், தாமரைப்பாக்கம், காரைக்கால், அதிராம்பட்டினம், பாம்பன், ஆண்டிப்பட்டி தலா 1 செமீ மழை பெய்துள்ளது.
16ம் தேதி காலை வரைக்குமான வானிலை முன்னறிவிப்பு:
தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக் கூடும்.
சென்னை நகரைப் பொறுத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக் கூடும்.