ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து ராஜாவிடம் விசாரணை நடத்த மாட்டோம்-சிவராஜ் பாட்டீல்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்ட முறை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவிடம் விசாரணை நடத்தப்போவதில்லை என்று ஒரு நபர் குழு தலைவரான ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையில் ஒரு நபர் குழு ஒன்றை அமைத்து கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான தொலை தொடர்பு கொள்கைகள் குறித்து ஆய்வு நடத்துமாறு உத்தரவிட்டது.
இந்தக் குழுவின் விசாரணை தொடர்பான வரம்புகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிவராஜ் பாட்டீல் தெரிவித்தார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான தொலை தொடர்பு கொள்கைகள் குறித்து விசாரிக்கவிருக்கிறோம். விசாரணையின் வரம்புகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்வோம்.
இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடம் விசாரிக்கப் போவதில்லை. ஆனால் தொலைத் தொடர்பு துறையின் இன்னாள், முன்னாள் அதிகாரிகள் அனைவரிடமும் விசாரிக்கப்படும்.
என் தலைமையிலான குழு ஆய்வுக் குழுவே தவிர விசாரணைக் குழு அன்று. அதனால் அரசுக்கு எந்த பரிந்துரையும் வழங்கப்படமாட்டாது. ஒரு மாதத்திற்குள் எங்கள் பணியை முடித்து அறிக்கை தாக்கல் செய்வோம் என்று அவர் கூறினார்.