அடுத்த டிசம்பர் வரை இதே ரேஷன் கார்டுகள்-தமிழக அரசு
சென்னை: இப்போதுள்ள ரேஷன் கார்டுகளையே அடுத்த ஆண்டு டிசம்பர் வரை பயன்படுத்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு கோடியே 96 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. ஏற்கனவே உள்ள ரேஷன் கார்டுகளில், இணைக்கப்பட்டுள்ள தாள்கள் இந்த மாதத்துடன் தீர்ந்து போகும் நிலையில் உள்ளன.
எனவே தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏற்கனவே உள்ள ரேஷன் கார்டுகளே தொடர்ந்து நீடிக்கும் என்று இப்போது தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து உணவு, கூட்டுறவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் சுவரண்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இப்போது பொதுமக்களிடம் இருக்கும் குடும்ப அட்டைகள் அடுத்த வருடம் டிசம்பர் 31-ந்தேதி வரை செல்லுபடியாகும். அட்டைகளில் உள்ள தாள்கள் தீர்ந்து விட்டால் கூடுதலாக சேர்த்துக் கொள்வதற்குரிய தாள்கள் அச்சிட்டு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது...", என்று கூறியுள்ளார்.