சொத்து குவிப்பு வழக்கு-மாஜி அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கு கோர்ட் சம்மன்
நெல்லை: சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனை வரும் ஜனவரி மாதம் 10-ம் தேதி ஆஜராகுமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் வருமானத்துக்கு அதிமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2006-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் நெல்லையில் உள்ள அவரது வீடு மற்றும் உறவினர்கள் வீடு, ஹோட்டல் மற்றும் பண்ணை வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது 275 ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக நயினார் நாகேந்திரன், அவரது மனைவி சந்திரா, மைத்துனர்கள் சுப்பிரமணியன், நடராஜன், வள்ளிக்கண்ணு நவராஜ் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மீது நெல்லை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 3 கோடியே 9 லட்சத்து 97 ஆயிரத்து 97 ரூபாய்க்கு நகைகள், நிலம் வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். 145 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில் 168 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் வரும் ஜனவரி மாதம் 10-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜாராகி குற்றப்பத்திரிக்கை நகல் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.