ஜனவரி 1 முதல் ரேஷன் கடைகளில் இலவச பொங்கல் பை
இது குறித்து உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
வரும் 2011-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டை வைத்திருக்கும் ஒரு கோடியே 94 லட்சத்து 5 ஆயிரத்து 572 பேருக்கு தமிழக அரசு 1/2 கிலோ பச்சரிசி, 1/2 கிலோ வெல்லம், 100 கிராம் பாசிபருப்பு, 10 கிராம் முந்திரி பருப்பு, 5 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகிய பொருட்கள் அடங்கிய இலவச பையை வரும் ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்கிறது.
கடந்த நவம்பர் மாதம் 12-ம் தேதி பொங்கல் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யப்பட்டது. பின்னர் நவம்பர் 19-ம் தேதி ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, 22-ம் தேதி வழங்கல் ஆணை அளிக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. ஒப்பந்தப்புள்ளி கோர மற்ற மாநிலங்களிலும் விளம்பரப்படுத்தியபோதும், தமிழக வர்த்தகர்கள் மட்டும் தான் ஒப்பந்தப்புள்ளிகள் அளித்தனர்.
கொள்முதல் செய்யப்படும் பொருட்கள் மழை மற்றும் பனியால் பாதிக்காதவாறு பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்டுள்ளன. அந்த பாலிதீன் பைகள் 35 முதல் 52 மைக்ரான் அளவு தான் என்பதால் அவற்றை எளிதில் மறுசுழற்சி முறையில் பயன்படுத்த முடியும். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதி்ப்பும் ஏற்படாது.
தற்போது நீலகிரி மாவட்டத்தில் கடும் பனி நிலவுவதால் பாலிதீன் பைகளில் அடைக்கப்படும் அனைத்து சிறு பொட்டலங்களையும் துணிப்பைகளில் போட்டு விநியோகம் செய்யப்படும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.