நான் குற்றவாளி அல்ல, வழக்கறிஞர்; எங்கும் ஓட மாட்டேன்! - ராசா கோபம்

ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டு, தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட ஆண்டிமுத்து ராசா, இப்போது சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை சிபிஐயிடமிருந்து சம்மன் பெற்ற அவர், உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வந்ததாகக் கூறினார். இது வழக்கமான பரிசோதனை என்றும் அவர் தெரிவித்தார்.
மருத்துவமனையில் அவரைச் சந்தித்த நிருபர்களிடம், "நான் எங்கேயும் ஓடிப் போக மாட்டேன். காரணம், நான் குற்றவாளி அல்ல... ஒரு வழக்கறிஞர். இது சிபிஐக்கும் நன்றாகத் தெரியும்.
சிபிஐ வேண்டும் விவரங்களை, எனக்குத் தெரிந்த வரை ஒளிவு மறைவில்லாமல் சொல்லக் கடமைப்பட்டவன் நான். இந்த ராசாவைப் பற்றி சிபிஐக்கே தெரியும்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தவறு செய்த அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் கூறியிருக்கிறார். அதுபற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
நேற்று முன்தினம் தலைவர் கலைஞரை சந்தித்தேன். அது ஒரு தலைவருக்கும் தொண்டருக்குமான சந்திப்பு. அடிக்கடி நிகழக் கூடியது..", என்றார் ராசா.
முன்ஜாமீனுக்கு முயன்றேனா?
முன்ஜாமீனுக்கு அவர் முயன்றது குறித்து கேட்கப்பட்ட போது, "அது ஆதாரமற்ற செய்தி.. நான் என்ன கிரிமினலா, முன்ஜாமீன் எடுக்க?" என்றார் மிகவும் கடுப்புடன்.












Click it and Unblock the Notifications