திருப்பதி உண்டியல் வருமானம் ரூ. 525 கோடி: விரைவில் நகரும் படிக்கட்டுகள்
நாகர்கோவில்: கடந்தாண்டில் திருப்பதி கோவில் உண்டியல் மூலம் ரூ. 525 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் இ-தரிசன டிக்கெட் கவுண்டர் திறக்கப்பட்டது. இதனை திருப்பதி திருமலை தேவஸ்தான இணை நிர்வாக அலுவலர் யுவராஜ் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
குமரியில் திறக்கப்பட்டுள்ள மையம் உள்பட நாடு முழுவதும் 78 இடங்களில் இ-தரிசன டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தினமும் 7 ஆயிரம் பேர் வரை திருப்பதி தரிசனத்துக்கு முன்பதிவு செய்கின்றனர். ரூ.50, ரூ.100, ரூ.300க்கு டிக்கெட்டிகள் கிடைக்கின்றன.
பதிவு செய்த 60 நாட்களுக்குள் பக்தர்கள் விரும்பிய நாளில் தரிசனம் செய்யலாம். இதன் மூலம் 9 வகையான தரிசனம், ஒரு நாள் தங்கும் வசதி ஆகியவற்றை செவ்வாய்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் பதிவு செய்யலாம்.
கடந்தாண்டு திருப்பதி கோவிலில் உண்டியல் மூலம் ரூ.525 கோடி வருவாய் கிடைத்துள்ளது. திருப்பதி சன்னிதான தரிசன பகுதியில் விரைவில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட உள்ளது.
குமரியில் திருப்பதி கோவில் கட்ட விவேகானந்த கேந்திரம் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தேவஸ்தானம் பரிசீலனை செய்யும். திருமலை பகுதியில் அட்டகாசம் செய்த சிறுத்தைகள் பிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.