ஈரானில் ஒரே நேரத்தில் 11 தீவிரவாத அமைப்பினர்களுக்கு தூக்கு
டெஹ்ரான்: ஈரானில், பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஜுந்தாலா என்னும் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 11 பேர் நேற்று ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டனர்.
ஈரானில் சன்னி பிரிவைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு ஜுந்தாலா. கடந்த வாரம் ஷியா முஸ்லீம்கள் 39 பேர் கொல்லப்பட்ட குண்டுவெடிப்பில் ஜுந்தாலாவின் 11 உறுபபினர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இந்த அமைப்பின்ர் ஈரானில் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இவர்கள் கடவுள் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.
ஷியா முஸ்லிம்கள் ஆதிக்கத்தில் இருக்கும் ஈரானைச் சேர்ந்த ஷன்னி பிரிவினரான இவர்கள் பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தென்கிழக்கு ஈரானில் பதுங்கியுள்ளனர். இப்பகுதியில் சட்டம் என்பதே கிடையாது. இங்கு கடத்தலும், கொள்ளைச் சம்பவங்களும் அதிக அளவில் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு துவக்கத்தில் ஜுந்தாலாவை தீவிரவாத இயக்கம் என்று அமெரிக்கா அறிவித்தது.
இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலுச்சி என்ற சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். தங்கள் இனத்தின் உரிமைக்காகவே போராடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஷியா முஸ்லிம்கள் 39 பேரைக் குண்டு வைத்துக் கொன்ற வழக்கில் ஜுந்தாலா அமைப்பைச் சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது சிஸ்தான்- பலுசிஸ்தான் மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அந்த 11 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் தூக்கிலிட்டனர்.
கடந்த சில ஆண்டுகளாக ஜுந்தாலா அமைப்பு நடத்திய தாக்குதல்களில் ஏராளமான இராணுவத்தினரும், பொது மக்களும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.