3 வாரம் கழித்தே வெங்காய விலை குறையும்: பவார் சொல்கிறார்
வெங்காய விலை தாறுமாறாக ஏறி மக்களை கண்கலங்க வைத்துள்ளது. சென்னையில் ஒருகிலோ பெரிய வெங்காயம் ரூ. 100க்கு விற்கப்படுகிறது. ஹோட்டல்களில் வெங்காய தோசை ரத்து செய்யப்பட்டுள்ளது. அப்படியே விற்றாலும் பெருமளவில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சொல்லொணாத் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில் வெங்காய விலை இன்னும் 3 வாரங்களுக்கு அதிகமாகத் தான் இருக்கும் என்றும், வெங்காய ஏற்றுமதி தடை செய்யப்பட்ட பிறகு விலை ஏற்றம் இன்றி நிலையாக இருக்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து பவார் கூறுகையில், அடுத்த 3 வாரங்களுக்கு வெங்காய விலை அதிகமாகத் தான் இருக்கும். அதன் பிறகே சற்று குறையும். வெங்காய ஏற்றமதிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதன் எதிரொலியாக விலை குறையும் என்றார்.
வெங்காய விலை ஒரே அடியாக அதிகரித்திரு்பபதை அடுத்து வெங்காய ஏற்றுமதியை வரும் ஜனவரி மாதம் 15-ம் தேதி வரை தடை செய்ய நேற்று அரசு தீர்மானித்து உத்தரவிட்டுள்ளது. தற்போது ஒரு கிலோ வெங்காயம் ரூ. 60 முதல் 70 வரை விற்கப்படுகிறது.
டெல்லி சந்தையில் வெங்காயம் கிலோ ரூ. 60 முதல் 70 வரை விற்கப்படுகிறது. மற்ற முக்கிய நகரங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் கிலோ ரூ. 35 முதல் 40 வரை விற்பனையானது.
இப்படி வெங்காய விலை அதிகரித்துக் கொண்டே போனால், இனி வெங்காயம் பணக்காரர்களுக்கு மட்டுமே என்ற நிலை வந்துவிடும்.
அதை விட முக்கியமாக வெங்காயம் என்று யாரையும் திட்ட முடியாது!