பாஜக அலுவலகத்திற்கு விசிட் அடித்த ராஜ் தாக்கரே-சிவசேனா கடுப்பு
மும்பை: மகாராஷ்டிர மாநில பாஜக அலுவலகத்திற்கு மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே சென்று பாஜக தலைவர்களைச் சந்தித்ததால் சிவசேனா தரப்பு கோபமடைந்துள்ளது.
மும்பை,நரிமான் பாயின்ட் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகததிற்கு திடீரென ராஜ் தாக்கரே சென்றார். பாஜக மாநிலத் தலைவர் சுதிர் முகந்திவார், வினோத் தவதே, மது சவான், மாதவ் பண்டாரி உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்தித்தார்.
இது மகாராஷ்டிர அரசியல்வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சிவசேனா கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த சந்திப்பு குறித்து ராஜ் தாக்கரேவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மாதோஸ்ரீக்கு (பால் தாக்கரேவின் வீடு) போனால் அதுகுறித்து ஏதாவது கேட்பீர்களா. அதுபோலத்தான் இதுவும். நாங்கள் டீ சாப்பிட்டோம், பொதுவாக பேசினோம். வேறு எந்த முக்கியத்துவமும் இதில் இல்லை என்றார்.
சிவசேனாவுக்கும், பாஜகவுக்கும் இடையே கூட்டணி உள்ள போதிலும் முன்பு போல நெருக்கம் இல்லை. மேலும் 2012ம் ஆண்டு மும்பை மாநகராட்சித் தேர்தல் வருகிறது. இந்த நிலையில் ராஜ் தாக்கரே பாஜக அலுவலகத்திற்கு வந்ததால் சிவசேனா தரப்பு சற்று டென்ஷனாகியுள்ளது.