திருப்பூர் அருகே ரயிலை கவிழ்க்க சதி: ராகுல் வருகைக்கு எதிர்ப்பா?
திருப்பூர்: கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலை திருப்பூர் அருகே கவிழ்க்க சதி நடைபெற்றது.
கன்னியாகுமரியில் இருந்து நேற்று முன்தினம் மும்பைக்கு புறப்பட்ட மும்பை எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பூரை அடுத்த கூலிபாளையம் கேட்தோட்டம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் ரயில் ஆட்டம் கண்டது. இதனால் பயணிகள் பீதி அடைந்தனர். இதையடுத்து ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்திவிட்டு கீழே இறங்கிச் சென்று பார்த்தார். அப்போது தண்டவாளத்தில் 30 கிலோ எடை கொண்ட பாறாங்கற்கள் வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்தார்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி மற்றும் விஜயமங்கலம் இடையே கடந்த ஆண்டு நவம்பர் முதல் இது வரை 20 முறை பாறாங்கற்கள் வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது. இது தொடர்பாக தற்போது வரை 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் நடந்த இந்த சம்பவத்தை அடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகம் வரும் ராகுல் காந்தி நாளை திருப்பூர் செல்கிறார். அவருக்கு ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக மிரட்டல் இரு்பபதாக உளவுத்துறை எச்சரித்திருக்கிறது. எனவே, ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த சதி நடந்திருக்குமோ என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.