நாடாளுமன்றத்தை முடக்கிய பாஜக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரணாப் முகர்ஜி
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை நடத்தவிடாமல் அமளியில் ஈட்டுபட்டு முடங்கச் செய்ததற்காக பாஜக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரனாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் முழுவதும் 2ஜி விவகாரம் குறி்த்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கக் கோரி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் குளிர்கால கூட்டத் தொடரில் எந்த அலுவல்களும் நடக்காமல் நாடாளுமன்றம் முற்றிலும் முடங்கியது. இதற்காக பாஜக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டாக வேண்டும் என்று நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின்போது விவாதம் நடத்த நாங்கள் தயாராக இருந்தும் எதிர்கட்சிகள் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டன. எங்களையும் விவாதிக்க விடவில்லை.
ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றம் கூடியவுடனேயே சுமார் 30, 40 பேர் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி எந்த அலுவல்களும் நடத்தவிடாமல் செய்தனர். இதன் மூலம் அவர்கள் நாடாளுமன்ற அமைப்பை முழுவதுமாக சிதைத்துவிட்டனர். இதற்காக அவர்கள் மக்களிடம் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
இதற்கிடையே பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டி, 2ஜி விவகாரம் குறி்த்து விவாதிக்கலாம் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்ததையும் பாஜக நிராகரித்தது.
சிறப்புக் கூட்டம் கூட்டி விவாதம் நடத்த வேண்டிய அவசியமே இல்லை. நாங்கள் கேட்பதெல்லாம் ஜேபிசி விசாரணை தான் என்று பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.