உலகெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்-இயேசு பிறந்த பெத்லகேமில் வரலாறு காணாத கூட்டம்
பெத்லகேம்: உலகெங்கும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகவும், உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டது. இயேசு நாதர் பிறந்த பெத்லகேமில் வரலாறு காணாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கடந்த பத்து ஆண்டுகளில் இந்த அளவுக்கு கூட்டம் வந்ததில்லையாம் இங்கு. பல்லாயிரக்கணக்கானோர் சர்ச் ஆப் நேட்டிவிட்டியில் கூடி இயேசுநாதரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர். இந்த இடத்தில்தான் இயேசுநாதர் பிறந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகும்.
இன்று காலை முதலே அங்கு பிரார்த்தனைகள் தொடங்கி விட்டன. கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் இங்கு வந்திருப்பதாக இஸ்ரேல் ராணுவத் தகவல்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இங்கு 50,000 பேர் வந்திருந்தனர்.
கிறிஸ்தவர்கள் பெருமளவில் கூடியிருந்ததால் அங்கு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தியாவில்
இந்தியாவிலும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. நாடெங்கும் உள்ள கிறிஸ்தவப் பேராலயங்களில் நேற்று நள்ளிரவுப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. இன்று காலையில் கிறிஸ்தவர்கள் புத்தாடைகள் அணிந்து, கேக் உள்ளிட்ட இனிப்புகளை உற்றார், உறவினர், நண்பர்களுக்கு வழங்கி கிறிஸ்துமஸை கொண்டாடினர்.
தமிழகத்திலும் இன்று கிறிஸ்துமஸ் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.