'அரை சதம்' கடந்த தக்காளி!!
என்னய்யா இது... வருசத்துக்கு ஒரு முறை பேசி வைத்துக் கொண்டு வெங்காயம் தக்காளி விலையை உயர்த்துகிறார்களா என்று மக்கள் கமெண்ட் அடிக்கும் அளவுக்கு இஷ்டத்துக்கும் உயர்ந்து வருகிறது வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை.
ஒரு பக்கம் வெங்காயத்தின் விலை ரூ 100-ஐத் தொட்டு, சற்று குறைந்து, இப்போது மீண்டும் ஏறுமுகத்துக்கு வந்துள்ளது.
இன்னொரு பக்கம், சமையலில் வெங்காயத்தின் பங்காளியாகக் கருதப்படும் தக்காளியின் விலையும் உயர ஆரம்பித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி தக்காளியின் விலை கோயம்பேட்டில் கிலோ ரூ 50 ஆகவும், சில்லறைக் கடைகளில் ரூ 63 ஆகவும் உள்ளது.
நவம்பரில் கிலோ தக்காளி ரூ 5 முதல் 7-க்குக் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கோயம்பேடு தக்காளி வியாபாரி கூறுகையில், "தினமும் 80 லாரி தக்காளி வந்த இடத்தில் தற்போது 40 லாரி தக்காளி தான் வருகிறது. 13 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.450 முதல் 550 வரை விற்பனையாகிறது. இதனால் சில்லறை கடைகளில் ரூ.45 முதல் ரூ.50 வரை விற்பார்கள்", என்றார்.
கொசுறு கட்
தக்காளியை தொடர்ந்து கறிவேப்பிலை இலை விலையும் உயர்ந்து வருகிறது. கோயம்பேட்டில் 1 கிலோ கறிவேப்பிலை ரூ.40க்கு விற்கப்படுகிறது. இதனால் மளிகை கடைகளில் காய்கறி வாங்கினால் கொசுறாக வழங்கப்படும் கறிவேப்பிலை நிறுத்தப்பட்டு 2 ரூபாய்க்கு விற்கிறார்கள்.
கொத்தமல்லி விலை ஒரு சிறிய கட்டு ரூ 20க்கு விற்கப்படுவதால் முன்பே இந்தக் கொசுறும் நிறுத்தப்பட்டுவிட்டது.
இன்று வெங்காயம் ரூ 5 விலை உயர்வு
நேற்று ஞாயிற்றுக் கிழமை ரூ 45-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயம், இன்று மேலும் ரூ 5 உயர்ந்து 50-ஐக் கடந்தது.