தேர்தலுக்கு தேசிய அளவில் நிதியை உருவாக்க அசோசம் கோரிக்கை
டெல்லி: தேர்தலுகளுக்காகவே பிரத்யேகமாக தேசிய நிதியை உருவாக்க வேண்டும் என்று தொழில் வர்த்தக அமைப்பான அசோசம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், அரசியல் கட்சிகளுக்கு தனியார்கள், நிறுவனங்கள் நிதியளிப்பதையும் சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று அது கோரியுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய அளவில் தேர்தலுக்காகவே ஒரு நிதியை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசியல் கட்சிகள் தனியார் நிறுவனங்களிடமிருந்தும், தனி நபர்களிடமிருந்தும் நன்கொடை பெறுவதை அனுமதிக்க வேண்டும். இதை சட்டப்பூர்வமானதாக்க வேண்டும். இவற்றுக்கு ரசீது பெறப்பட வேண்டும். இதை வாராந்திர அடிப்படையில் பகிரங்கமாக தெரிவிக்க கட்சிகள் கேட்டுக் கொள்ளப்பட வேண்டும். இதற்காக தனிச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.
இதன் மூலம் பொது வாழ்க்கையில் கள்ளப் பணம் நடமாடுவதை தடுக்க முடியும். அரசியல் துறையையும் தூய்மையாக்க வழி பிறக்கும்.
தேர்தலை நடத்த அரசே செலவிடுவதற்குப் பதிலாக ஒரு தேசிய அளவிலான நிதியை உருவாக்கலாம். அந்த நிதிக்கு யார் வேண்டுமானாலும் நன்கொடை தரலாம் என அறிவிக்க வேண்டும். இந்த நிதியை தேர்தல் செலவுக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கான நடவடிக்கையை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்ய வேண்டும். பொதுமக்களும் இணைந்து தேர்தலில் பங்கேற்க இந்த நிதி பயன்படும்.