முல்லை பெரியாறு புதிய அணைக்கான இடம் தேர்வு: அடுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான நிதி வரும் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் என்று கேரள நீர்பாசன அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தி்ற்கும், கேரளாவிற்கும் இடையே முடியாத பிரச்சனையாக இருக்கிறது முல்லைப் பெரியாறு அணை. முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்க கேரள அரசு மறுத்து வருகிறது.
நீர்மட்டத்தை உயர்த்தினால் அணை உடைந்து இடுக்கி உட்பட பல்வேறு மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி வருகிறது. அன்மையில் முல்லை பெரியாறு அணை உடைவது போன்ற கிராபிக்ஸ் சிடியை கேரள முதல்வர் அச்சுதானந்தன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையே மத்திய குழு அன்மையில் முல்லை பெரியாறில் ஆய்வு நடத்தியது.
கேரள சட்டப்பேரவையில் கடந்த டிசம்பர் 30-ம் தேதி அன்று நடந்த கேள்வி நேரத்தின் போது பேசிய முஸ்லிம் லீக் உறுப்பினர் முகமது முல்லை பெரியாறில் அணை கட்டும் பணி எப்போது தொடங்கும் என கேள்வி எழுப்பினார். அதற்கு நீர்பாசன அமைச்சர் பிரேமசந்திரன் அளித்த பதில் வருமாறு,
முல்லை பெரியாறில் இப்போது உள்ள அணையில் இருந்து 366 மீட்டர் தொலைவில் புதிய அணைக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ரூ.1.37 கோடி செலவில் அடிப்படை பணிகள் நடந்து வருகின்றன. புதிய அணைக்கான நிதி அடுத்த பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் என்றார்.