வாரணாசி குண்டுவெடிப்பு-மும்பையிலிருந்து கட்டளை வந்ததா?
மும்பை: வாரணாசியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில், மும்பையிலிருந்து கட்டளைகள் போயுள்ளதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
வாரணாசியில், கடந்த ஆண்டு டிசம்பர் 7ம் தேதி ஷீத்லா காட் என்ற இடத்தில் குண்டுவெடித்தது. இதில், ஒரு குழந்தை உயிரிழந்தது. 32 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு பொறுப்பேற்பதாக இமெயில் மூலம் தகவல் வந்தது. மேலும் இந்த மெயில் மும்பையிலிருந்து அனுப்பப்பட்டது. ஆனால் அந்த மெயில் வந்த கம்ப்யூட்டருக்கு உரியவர்களை போலீஸார் பிடித்து விசாரித்தபோது அவர்களுக்குத் தொடர்பு இல்லை என்று தெரிய வந்தது.
இந்த நிலையில், தற்போது வாரணாசி சம்பவத்திற்கு மும்பைக்குத் தொடர்பு உள்ளதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
குண்டுவெடிப்பு சம்பவத்தன்று மும்பையிலிருந்து வாரணாசியைச் சேர்ந்த ஒருவருக்கு இரண்டு தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. இதைக் கண்டுபிடித்துள்ள போலீஸார் அந்த நபர் குறித்தும், அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
இந்த செல்போனில் பயன்படுத்தப்பட்ட ப்ரீ பெய்டு தொடர்பு, வாரணாசி அருகே உள்ள மா நகரிலிருந்து வாங்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்புக்கு 6 நாட்களுக்கு முன்புதான் இதை வாங்கியுள்ளனர். கார்டு வாங்க கொடுத்த முகவரி சான்று, அடையாள அட்டை சான்று ஆகியவை போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்தே அந்த போனை வாங்கியவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது.
வாரணாசி குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.