கேரளாவில் ஆசிரியர் தேர்வில் செல்போனில் விடை கேட்டு எழுதிய பெண், கணவருடன் கைது
திருவனந்தபுரம்: கேரளாவில் செல்போன் உதவியுடன் அரசு ஆசிரியர் தேர்வு எழுதிய பெண் மற்றும் அவரது கணவரை கொல்லம் போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில் அரசு தேர்வாணைய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. தேர்வு நடப்பதற்கு முன்பே விடைகளை தேர்வு எழுதுபவர்களுக்கு செல்போன் மூலம் தெரிவித்து மோசடி நடந்தது. இதே போல் தேர்வு எழுதிய ஏராளமானோர் கலெக்டர் அலுவலகங்களிலும், சப்-இன்ஸ்பெக்டர்களாகவும் பணியில் சேர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த அரசு ஆசிரியர் தேர்விலும் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.
கொல்லத்தைச் சேர்ந்த பிரகாஷ்லால் என்பவன் தான் இந்த மோசடி கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டுள்ளான். விசாரணையில் மையநாடு பகுதியைச் சேர்ந்த ஷமீமா என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன் செல்போன் உதவியுடன் ஆசிரியர் தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாக பிரகாஷ்லால், ஷமீமாவுக்கு செல்போன் மூலம் விடைகளை கூறியுள்ளார். அதை குறிப்பெடுத்து கொண்ட ஷமீமா தேர்வு எழுதியுள்ளார். இதற்காக ஷமீமாவின் கணவர் ஷாஜி பிரகாஷ்லாலுக்கு ரூ.3 லட்சம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். முன் பணமாக ரூ.5 ஆயிரம் கொடுத்த அவர் பாக்கி தொகைக்கு செக் எழுதி கொடுத்துள்ளார். இதையடுத்து கொல்லம் போலீசார் நேற்று ஷமீமா மற்றும் ஷாஜியை கைது செய்தனர்.