விரைவில் பி.எப். வட்டி விகிதம் 9.5 சதவீதமாக உயர்வு : அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே
டெல்லி: 2010-1-ம் நிதி ஆண்டிற்கான பி.எப். வட்டி விகிதம் 9.5 சதவீதமாக உயர்த்த இபிஎப் நிர்வாக அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் 4.71 கோடி தொழிலாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர் பயனடைவார்கள்.
இது குறித்து நேற்று 2 மணி நேரமாக நடந்த கூட்டத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான( இபிஎப்) வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும், இபிஎபி தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்போவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிஎப் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு நிதி அமைச்சகம் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.
கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து இபிஎப் முதலீட்டாளர்களுக்கு 8.5 சதவீத வட்டி அளிக்கப்பட்டு வருகிறது. உபரியாக ரூ. 1,731.57 கோடி இருப்பதால் தான் வட்டியை உயர்த்த நிர்வாகக் குழு முன்வந்துள்ளது. ஆனால் வட்டியை உயர்த்த நிதி அமைச்சம் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது.
தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை உடனுக்குடன் பதிவு செய்யாததினால் தான் உபரி தொகை உள்ளது. அதனால் வட்டி விகிதத்தை உயர்த்தினால் அது பெரும் பிரச்சனையாகிவிடும் என்று நிதி அமைச்சகம் எச்சரித்தது.
கடந்த 9-ம் தேதி தொழிலாளர் அமைச்சகம் நிதி அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில் தொழிலாளர்களின் முதலீட்டுக்கு அரசு கூடுதலாக எந்தத் தொகையும் தருவதில்லை அதனால் வட்டியை உயர்த்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அளித்த தகவலின்படி, தொழிலாளர் வைப்பு நிதியில் உபரி தொகை இருக்க வாய்ப்பே இல்லை என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஓய்வூதிய தொகையை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட நிதி மேலாளர்கள், பங்குச் சந்தை முதலீட்டில் உறுதியான லாபம் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் வழங்கப்படாத நிலையில் அதில் முதலீடு செய்ய முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். இவர்களது நிர்வாகத்தின் கீழ் ரூ. 5 லட்சம் கோடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய கூட்டத்தில் எல்ஐசி நிறுவனத்தின் துணை நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் நிறுவனத்தில் மீண்டும் முதலீடு செய்வதென முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த 2010-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கடன் வழங்குவதற்கு லஞ்சம் பெற்றதாக எல்ஐசி ஹவுசிங் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்டனர். இதனால் எல்ஐசி ஹவுசிங் நிறுவனத்தில் முதலீடு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் மீண்டும் முதலீடு செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.