தொகுதி பங்கீடு: அதிமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று 2வது சுற்று பேச்சு
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம், இந்தியக் குடியரசுக் கட்சி, டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகிய சிறிய கட்சிகளுடன் மட்டுமே இதுவரை தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ளது. இந்தக் கட்சிகளுக்கு மொத்தமே 4 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஆனால், முக்கிய கட்சிகளான மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டுகளுடன் தொகுதிப் பங்கீட்டை அதிமுக இன்னும் முடிவு செய்யவில்லை.
தேமுதிக கூட்டணிக்குள் வந்துவிடும் என்று காத்திருக்கும் அதிமுக, முதலில் அக் கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்கிவிட்டே, பிற முக்கிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு செய்ய திட்டமிட்டிருந்தது.
ஆனால், தேமுதிக வருவதற்கான அறிகுறிகள் ஏதும் இன்னும் தென்படவில்லை. இதற்கிடையே அதிரடியாக பாமகவுடன் தொகுதிப் பங்கீடு உடன்பாட்டை ஒரே நாளில் முடித்துவிட்ட திமுக, காங்கிரசுனான பேச்சுவார்த்தைகளை தீவிரமாக்கியுள்ளது.
இதனால் தாங்கள் பின் தங்கி வருவதை உணர்ந்துவிட்ட அதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று 2வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியது. நாளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சு நடத்தவுள்ளது.
அதிமுக, மார்க்சிஸ்ட் இரு கட்சிகளும் ஏற்கனவே கடந்த மாதம் 29ம் தேதி ஒருமுறை பேச்சு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அப்போது அதிமுக சார்பில் அக்கட்சி நிர்வாகிகள் ஓ. பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரும், மார்க்சிஸ்ட் சார்பில் அக்கட்சி நிர்வாகிகள் ஜி. ராமகிருஷ்ணன், டி.கே. ரங்கராஜன், கே. பாலகிருஷ்ணன் ஆகியோரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இன்றும் இவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் சந்தித்துப் பேசுனர். இதையடுத்து நிருபர்களிடம் பேசிய ராமகிருஷ்ணன், பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாகவும் விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படு்ம் என்றும் கூறினார்.