டேவிஸை விடுவி்க்க சித்திகியை கேட்டு பாக். பேரம் : எரிச்சலில் அமெரிக்கா
இஸ்லாமாபாத்: அமெரிக்காவில் 86 வருட சிறை தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தான் தீவிரவாதியாக கருதப்படும் ஆபியா சித்திகியை கொடுத்தால் சிஐஏ ஏஜென்டான டேவிஸை விடுவிப்பதாக பாகிஸ்தான் அரசு கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நரம்பியல் விஞ்ஞானியான சித்திகியை விடுவித்தால் டேவிஸை விடுவிப்பதாக பாகிஸ்தான் அரசு அமெரிக்காவுடன் பேரம் பேசியுள்ளது. ஆனால் அதை ஏற்க அமெரிக்க நிர்வாகம் மறுத்துவிட்டது. இந்த தகவலை ஏபிசி நியூஸ் தெரிவித்துள்ளது.
இந்த பேரம் குறித்து மூத்த அமெரிக்க நிர்வாக அதிகாரியும், பாகிஸ்தான் அதிகாரியும் பேசிக் கொண்டதாக ஏபிசி நியூசில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானியர்கள் தான் பேரம் பேசினார்கள். நாங்கள் அதை தொடரமாட்டோம் என்று அமெரிக்க அதிகாரி கூறியுள்ளார்.
டேவிஸ் விவகாரத்தால் அமெரிக்க-பாகிஸ்தான் உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த பேரம் பேசியதால் சிக்கல் அதிகரித்துள்ளது.
டேவிஸ் 2 பாகிஸ்தானியர்களைக் கொன்றதற்காக கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானியர்கள் இருவரும் தன்னிடம் கொள்ளையடிக்க முயன்றதால் தான் தற்காப்புக்காக சுட்டதாக டேவிஸ் தெரிவித்துள்ளார்.