ரகசிய பேச்சுவார்த்தைகளில் இறங்கிய அதிமுக-இடதுசாரிகள்
கடந்த 2006 தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 13 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 இடங்களும் ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டும் தரப்பட்டது. இந்த ராஜ்யசபா எம்பி சீட்டை அக் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜாவுக்கு திமுக வழங்கியது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 9 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 இடங்களிலும் வென்றன.
இந் நிலையில் இப்போது மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிமுகவிடம் 20 தொகுதிகளைக் கேட்டுள்ளது. அவர்கள் என்ன கேட்கிறார்களோ அதே அளவு தொகுதிகள் எங்களுக்கும் வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் கோரி வருகிறார்.
முன்பெல்லாம் சசிகலாவின் உதவியால் அவரது செல்வாக்கை வைத்து ஜெயலலிதாவிடம் நேரடியாகவே பேசி முடிவு செய்வார் தா.பாண்டியன். ஆனால், இம்முறை சசிகலாவின் பேச்சை ஜெயலலிதா கேட்பதே இல்லை என்றும், அவரை இயக்குவது ஒரு பத்திரிக்கையாளரும், நீதிமன்றங்களில் கேஸ் போட்டே அரசியல் நடத்தும் ஒருவரும், ஒரு பத்திரிக்கையின் அட்வைசரும், இந்த மூவரின் சமூகத்தைச் சேர்ந்த ஒரு அதிமுக எம்பியும் தான் என்கிறார்கள்.
இவர்கள் தரும் ஐடியாக்களின்படியே எல்லா முடிவுகளையும் ஜெயலலிதா எடுத்து வருகிறார் என்கிறார்கள். இடதுசாரிகள் மீது பெரிய அளவில் மரியாதை இல்லாத இந்த நால்வருமே அவர்களுக்கு பெருமளவில் இடங்களைக் குறைக்குமாறு அட்வைஸ் தந்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும் இவர்களது அட்வைஸ்படியே தேமுதிகவை கூட்டணிக்குள் இழுத்துவிட்ட ஜெயலலிதா இடதுசாரிகளுக்கும் மதிமுகவுக்கும் இடங்களை பெருமளவில் குறைக்க முடிவு செய்துவிட்டார்.
தேமுதிகவுக்கு 35 இடங்கள் வரை தரப்பட வேண்டிய நிலை உள்ளதால், இடதுசாரிகளுக்கு அதிகபட்சம் 15 இடங்களே தரப்படும் என்று அதிமுக கூறிவிட்டதாகத் தெரிகிறது. இதனால் அந்தக் கட்சிகள் அதி்ர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.
அதிமுக தேர்தல் குழுவினருடன் அந்தக் கட்சியினர் பல முறை பேச்சு நடத்தியும் பெரிய அளவில் பலன் ஏற்படவில்லை. இந்தச் சந்திப்புகள் நடப்பதும், அது சுமூகமாக நடந்ததாக இரு தரப்பினரும் பதில் தருவதுமாக ஒரு மாதம் கடந்துவிட்டது.
இதனால் இந்தப் பேச்சுவார்த்தைகளில் சுமூகம் ஏதும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
மீண்டும் மீண்டும் அதிமுக அலுவலத்துக்குப் போய் எந்த அதிகாரமும் இல்லாத ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவினரை சந்தித்து, டீ-வடை சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து, பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது என்று எத்தனை நாட்கள் தான் காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பது என்ற கவலை இடதுசாரிகளை பற்றிக் கொண்டுள்ளது.
திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் தான் ரசாபாசம் நடக்கிறது. எங்கள் கூட்டணியில் நோ பிராப்ளம் என்ற இமேஜை உருவாக்க முயன்று வரும் அதிமுகவுக்கும் இதே கவலையே உள்ளது. இதனால் வெளிப்படையாக சந்தித்து டீ-வடை சாப்பிட வேண்டாம்.. ரகசியமாகவே பேசலாம் என்று இரு தரப்பினதரும் முடிவு செய்துள்ளனர்.
இந்த ஐடியாவைத் தந்ததும் அந்த பத்திரிக்கையாளரே. இதையடுத்து நேற்று இடதுசாரிக் கட்சியினருடன் அதிமுக குழுவினர் ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இந்தச் சந்திப்பது நடந்ததை இரு தரப்பினரும் வெளியில் சொல்லிக் கொள்ளவில்லை.
மிக மிக அதிகப்படியாகப் போனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 11 இடங்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 இடங்களும் தரப்படலாம் என்று தெரிகிறது.
இதனால் இரு கட்சிகளுமே அதி்ர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.