மகா சிவராத்திரி: சென்செக்ஸ் இன்று லீவு!
மும்பை: பட்ஜெட் காரணமாக நேற்று ஒரே நாளில் 623 புள்ளிகள் உயர்ந்து 18446.50 புள்ளிகளில் முடிந்தது சென்செக்ஸ். மகா சிவராத்திரி காரணமாக இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பங்குச் சந்தையில் நேற்று மிகுந்த எழுச்சியுடன் வர்த்தகம் நடந்தது. அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் எதிரொலியாக பங்குச் சந்தையில் 623 புள்ளிகள் உயர்ந்தது. கடந்த 21 மாதங்களில் இந்த அளவுக்கு புள்ளிகள் உயர்ந்தது இதுவே முதல் முறையாகும்.
இதனால் பங்குச் சந்தை குறியீட்டெண் 18,446.50 புள்ளிகளாக உயர்ந்தது.
இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 189 புள்ளிகள் அதிகரித்ததில் குறியீட்டெண் 5,522 புள்ளிகளாக உயர்ந்தது.
2011-12-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் உற்பத்தி வரி உயர்த்தப்படாதது முதலீட்டாளர்களுக்கு மிகப் பெரும் ஆறுதலான விஷயமாக இருந்தது. அத்துடன் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டதும் அவர்களது நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்தது.
அனைத்துக்கும் மேலாக கம்பெனிகள் மீதான சர்சார்ஜ் 7.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டதும் பங்குச் சந்தையில் முன்னேற்றத்துக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவித்தனர்.
இன்று லீவு:
இன்று புதன்கிழமை மகா சிவராத்திரி என்பதால் வட இந்தியா முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பங்குச் சந்தை இன்று இயங்கவில்லை. அந்நியச் செலாவணி வர்த்தகம், தங்கம் - வெள்ளி மார்க்கெட், எண்ணெய் மார்க்கெட் என அனைத்து வர்த்தகமும் இன்று நிறுத்தப்பட்டுள்ளது.