பாகிஸ்தான்-மத துவேஷ சட்டத்தை எதிர்த்த கிருஸ்துவ அமைச்சர் சுட்டு கொலை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசின் மத துவேஷ சட்டங்களை தொடர்ந்து பகிரங்கமாக எதிர்த்துப் பேசி வந்த பாகிஸ்தான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சபாஷ் பட்டி இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
2 மாதங்ளுக்கு முன்புதான் மது துவேஷ சட்டத்தை எதிர்த்து வந்த அந்த நாட்டின் பஞ்சாப் மாகாண ஆளுநர் சல்மான் தசீர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் அதே காரணத்துக்காக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை சபாஷ் பட்டியின் காரை நெருங்கிய அடையாளம் தெரியாத சிலர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். மிகவும் நெருக்கமான நிலையில் அவர் சுடப்பட்டதால் உடனடியாக உயிரிழந்தார்.
கொல்லப்பட்ட பட்டி கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவராவார். அதிபர் சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்தவர். கிலானி தலைமையிலான பாகிஸ்தான் அமைச்சரவையில் இவர் மட்டுமே கிறிஸ்தவர் ஆவார்.
இந்த கொலைச் சம்பவத்தால் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.