அடுத்த நிதியாண்டில் விலைவாசி குறைந்துவிடும்! - பிரணாப் முகர்ஜி
டெல்லி: நாட்டில் அத்தியாவசியப் பொருள் விலை உயர்வுக்கு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வும் முக்கியக் காரணம் என்றும், அடுத்த ஆண்டு விலைவாசி கட்டுக்குள் வந்துவிடும் என்றும் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய தொழில் வர்த்தக சபை சம்மேளனங்களின் (ஃபிக்கி) கூட்டமைப்பின் 83-வது ஆண்டு விழாவில் பங்கேற்று அவர் பேசுகையில், "இந்தியாவில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வில் கச்சா எண்ணெய் விலையேற்றமும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் பணவீக்கம் உயர்ந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்துவது அரசுக்கு பெரும் சவாலாக உள்ளதென்பது உண்மைதான்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மட்டுமல்ல, பிற பொருள்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுதான் உண்மை நிலை. இதை அரசும் உணர்ந்து அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் வரும் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இது 8.6 சதவீதமாக உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலராக உயர்ந்துள்ளது. மேலும் லிபியா, எகிப்து உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சி எண்ணெய் உற்பத்தியை பாதித்து வருகிறது.
பணவீக்கம்...
கடந்த ஆண்டு பிப்ரவரியில் 20.2 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் இப்போது 9.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பணவீக்கம் 8.23 சதவீதமாக ஜனவரியில் குறைந்துள்ளது.
இப்போது அரசுக்குள்ள பெரும் சவாலே, வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, பணவீக்கத்தையும் கட்டுப்படுத்த வேண்டியிருப்பதாகும். இது எளிதான சவால் அல்ல. நடப்பு நிதி ஆண்டில் 7 முறை வங்கி வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றியமைத்துள்ளது. வேளாண் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில்கொண்டே இத்துறையில் தனியார் முதலீட்டை அதிகரிக்க பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
வேளாண் பொருள் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் அதை விநியோகிப்பதில் உள்ள சிக்கல்களை நீக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சாத்தியமானதே. ஆனால் அதை எட்டுவதற்கு பற்பல நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.
விலைவாசி நிச்சயம் குறையும். அதற்கான நடவடிக்கையின் முதற்படிதான் இந்த பட்ஜெட். வரும் நிதியாண்டில் விலைவாசி கணிசமாகக் குறையும் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார்.