சென்னையிலும் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும்-திருமாவளவன்
சென்னை: எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பத்து தொகுதிகளில் 2 தொகுதிகள் பொதுத் தொகுதிகளாக இருக்கும். சென்னையிலும் நாங்கள் போட்டியிடவுள்ளோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் 10 இடங்கள் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக வேளச்சேரியில் உள்ள தாய் மண் அலுவலகத்தில் திருமாவளவன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சியின் அங்கீகாரம் பெற 15 தொகுதிகள் தேவை என்பதால் நாங்கள் அவற்றை கட்டாயம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தோம்.
ஆனால் தற்போதுள்ள சூழ்நிலை கணக்கில் கொண்டு கூட்டணியில் பிற கட்சிகளையும் அரவணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எமது எதிர்பார்ப்புகளை குறைத்து கொண்டு உடன்பாட்டிற்கு வந்துள்ளோம்.
அதனால் இத்தனை சீட்டுகள் தான் வேண்டும் என்று அடம் பிடிக்காமல் மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் வகையில் ஏற்றுக்கொண்டுள்ளோம்.
அதனால் நம்மை ஏமாற்றி விட்டார்கள் என்று தொண்டர்கள் என்ன வேண்டாம். நம்பகத்தன்மைக்கும் நேர்மைக்கும் நாம் என்றும் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்து அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறலாம்.
4-ந் தேதி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. அதிலும் இன்று நடக்கின்ற தலைமை நிர்வாகிகள் கூட்டத்திலும் எந்த தொகுதியில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் 2 பொது தொகுதியில் விடுதலை சிறுத்தை போட்டியிடும். சென்னையிலும் தொகுதி கேட்க முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.