சட்டசபைத் தேர்தல் தேதியை மாற்றும் வாய்ப்பில்லை-பிரவீன் குமார்
சென்னை : பிற மாநில தேர்தல் தேதிகளை மனதில் கொண்டே தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டது. எனவே இதனை மாற்றும் வாய்ப்பில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக சட்டசபைக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. மொத்தம் 5 மாநிலங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. அனைத்து மாநில தேர்தல் தேதிகளையும் மனதில் கொண்டே தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இதில் மாற்றம் செய்யும் வாய்ப்பில்லை.
3 கார்களுக்கு மேல் வந்தால் பறிமுதல்
தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது குறித்து நாளை அரசியல் கட்சிகளுடன் பேசவுள்ளோம். இவற்றை கடுமையாக கண்காணிக்கவுள்ளோம்.
வேட்பாளர்கள் 3 கார்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்வோம்.
அமைச்சர்களின் கார்கள் அரசுப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட எதற்கும் அவற்றை பயன்படுத்தக் கூடாது.
வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். அதற்கு மேல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை தீவிரமாக கண்காணிக்கவுள்ளோம். செலவுகளைக் கண்காணிக்க அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்படும் என்றார் பிரவீன் குமார்.












Click it and Unblock the Notifications