காங்.குக்கு 40 சீட்களுக்கு மேல் ஒதுக்க முடியாது-மமதா பானர்ஜி
கொல்கத்தா: காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகள்தான் தர முடியும் என்று திரினமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி திட்டவட்டமாக கூறியுள்ளதால், மேற்கு வங்க காங்கிரஸ், திரினமூல் காங்கிரஸ் கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ராகுல் காந்தி எதையோ சொன்னார் என்று அவர் சொன்ன பார்முலாவை கையில் தூக்கிப் பிடித்தபடி தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் குண்டக்க மண்டக்க சீட் கேட்டு திமுக மற்றும் திரினமூல் காங்கிரஸை கலாய்த்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ்.
தமிழகத்தில் 90 சீட் கேட்டு திமுகவை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் பயமுறுத்தி வந்த காங்கிரஸ் தற்போது 60 சீட் என்று உல்டா நிலைக்கு வந்து நிற்கிறது.
அதேபோல மேற்கு வங்கத்தில் 98 சீட்களைக் கேட்டு மமதா பானர்ஜியையும், அவரது கட்சியினரையும் டென்ஷனாக்கியுள்ளது காங்கிரஸ். ஆனால் மமதாவோ 40 சீட்தான் என்று திட்டவட்டமாக கூறி விட்டார்.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 298 தொகுதிகள் உள்ளன. இந்த முறை தனது கட்சிக்கு நல்ல வெற்றி வாய்ப்புள்ளதாக கருதுகிறார் மமதா. இதனால் காங்கிரஸையும் கூட்டணிக்குள் இழுத்துள்ளார். அதேசமயம், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க அவர் முடிவு செய்துள்ளார். கூட்டணியாக ஆட்சி அமைத்தால் எவ்வளவு தலைவலி என்பதற்கு அவரே ஒரு சிறந்த உதாரணம் என்பதால் இந்த முடிவாம்.
மத்தியில் தங்களுக்குக் குடைச்சல் தந்து வரும் மமதாவுக்கு டென்ஷனை ஏற்படுத்தும் வகையில், 98 தொகுதிகள் தேவை என்று காங்கிரஸ் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதை மமதா கட்சி ஏற்கவில்லை.
அதிகபட்சம் 40 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று மமதா கூறி விட்டார். இதனால் காங்கிரஸ் கட்சி யோசித்துக் கொண்டிருக்கிறதாம்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 18ம் தேதி தொடங்கி 6 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.