திமுக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வருகின்றன-கருணாநிதி தகவல்
இதன் மூலம் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், மதிமுகவும் ஒரு வேளை திமுக அணிக்கு வருமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், காங்கிரஸ் கட்சி அதிமுக அணிக்கு போகக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் அடிபடுவதே.
அமைச்சரவையிலிருந்து வெளியேற திமுக முடிவு செய்து அறிவித்து விட்ட போதிலும், நேற்று வரை காத்திருக்க முடிவு செய்து பொறுமையாக இருந்தனர். ஆனால் காங்கிரஸ் தரப்பிலிருந்து யாரும் பேசவில்லை, வரவும் இல்லை. பிரணாப் முகர்ஜி வருவார், குலாம் நபி ஆசாத் வருவார், தங்கபாலு வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் யாரும் வரவில்லை.
நேற்று காலை அறிவாலயத்தில் ஸ்டாலின், அன்பழகன், ஆற்காடு வீராசாமி, டி.ஆர்.பாலு ஆகியோருடன் முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார். அதன் பிறகே திமுக அமைச்சர்கள் இன்று ராஜினாமா செய்யவுள்ளதாக பாலு தெரிவித்தார். மேலும் திமுக தலைமையுடன் காங்கிரஸ் தரப்பிலிருந்து யாரும் பேசவில்லை என்பதையும் பாலு தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு முதல்வர் கருணாநிதியை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவரிடம் காங்கிரஸ் தரப்பிலிருந்து யாராவது பேசினார்களா என்ற கேள்விக்கு, இல்லை. இல்லை என்றார் கருணாநிதி.
காங்கிரஸுடனான உறவு முறிய அவர்கள் கூடுதலாக கேட்ட 3 சீட்கள்தான் காரணமா என்ற கேள்விக்கு, அதுவும் ஒரு காரணம் என்றார் கருணாநிதி.
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்குப் பதில் வேறு யாரேனும் சேருவார்களா என்ற கேள்விக்கு, மேலும் சில கட்சிகள் சேர வாய்ப்பு இருக்கிறது. எந்தெந்த கட்சியினர் வருவார்கள் என்பது இன்று அல்லது நாளை தெரியும் என்றார் கருணாநிதி.
கருணாநிதியின் இந்தத் தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிமுக கூட்டணிக்கு காங்கிரஸ் முயற்சிப்பதாக தெரிகிறது. அப்படி நடந்தால் முதல் நபராக இடதுசாரிகள் அங்கிருந்து வெளியேறுவார்கள். அவர்கள் திமுகவில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல காங்கிரஸுக்கும், தேமுதிகவுக்கும், அதிமுக அதிக முக்கியத்துவம் கொடுக்கவுள்ளதால் அங்கு மதிமுக ஓரம் கட்டப்பட்டு விடும். அவர்களையும் திமுக கூட்டணிக்குள் இழுக்க முயற்சிக்கலாம்.
இதை விட முக்கியமாக சீமான், அதிமுக அணிக்கு எதிராக மாறக் கூடும். அவரையும் முடிந்தால் உள்ளே இழுக்க திமுக முயற்சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.