டிபி ரியாலிட்டியிருந்து ஷாகித் பால்வா திடீர் ராஜினாமா!
டெல்லி: டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து திடீர் ராஜினாமா செய்துள்ளார் ஷாகித் பால்வா.
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் எடிசலாட் டெலிபோன் நிறுவன அதிபர் ஷாகித் பால்வா கைது செய்யப்பட்டார். தற்போது அவர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் டி.பி. ரியாலிட்டி என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இதுதான் இவரது நிறுவனங்களில் முதன்மையாக செயல்பட்டு வந்தது.
இந்த நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக ஷாகித் பால்வா இருந்து வந்தார். அவர் திடீரென தனது நிர்வாக இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக தற்போதைய இணை நிர்வாக இயக்குநர் வினோத் கோயங்கா அந்தப் பதிவியில் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயிலில் இருப்பதால் தொழிலை கவனிக்க முடியாமல் அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக கருதப்படுகிறது.
அவருடன் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான சந்தன் பட்டாச்சாரியாவும் ராஜினாமா செய்துள்ளார்.
கலைஞர் டிவிக்கு ரூ 206 கோடி 'கடன்' அளித்த விவகாரத்தில் மாட்டிக் கொண்டுள்ளது இந்த டிபி ரியலிட்டி மற்றும் சினியுக் நிறுவனங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்கு விலை வீழ்ச்சி:
ஷாகித் பல்வா ராஜினாமாவை அடுத்து டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்தன. ஏற்கனவே இருந்த விலையை விட 18 சதவீதம் குறைவாக இன்றைய வர்த்தகத்தில் கைமாறின.
எடிசலாட் டெலிபோன் நிறுவனத்தில் ஷாகித் பல்வா துணைத் தலைவராகவும் இருக்கிறார். அந்த பதவியையும் அவர் ராஜினாமா செய்யக் கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications