ஹோண்டா வசமிருந்த பங்குகளை பாதி விலைக்கு வாங்கிய ஹீரோ குழுமம்!
ஹீரோ குழுமம், தனது முக்கிய பங்குதாரரான ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வசமிருந்த 26 சதவீத பங்குகளை 50 சதவீத தள்ளுபடி விலைக்கு வாங்கியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்றைய நிலவரப்படி ஹீரோ ஹோண்டா பங்குகள் ரூ 1518-க்கு விற்கப்படுகின்றன. ஆனால் ஹீரோ குழுமத்துக்கு பங்கு ஒன்றுக்கு ரூ 739.97 க்கு விற்றுள்ளது ஹோண்டா நிறுவனம்.
இதன் மூலம் ஹோண்டாவின் 26 சதவீத பங்குகளுக்கு ரூ 3841 கோடியை தந்துள்ளது முஞ்ஜாலின் ஹீரோ குழுமம்.
இதன் மூலம் பல ஆண்டு கூட்டு நிறுவனமாகத் திகழ்ந்த ஹீரோவும் ஹோண்டாவும் தனித்தனியாகப் பிரிந்து செயல்படுகின்றன. வரும் 2014 வரை ஹீரோ நிறுவனம் ஹீரோ ஹோண்டா பெயரில் மோட்டார் சைக்கிள்களை விற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு ஹீரோ நிறுவனம் தனது சொந்த தொழில் நுட்பத்தில் பைக்குகளைத் தயாரித்து விற்க வேண்டி வரும்.
ஹோண்டா நிறுவனம் ஏற்கெனவே தனியாக மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் இறங்கி, வெற்றிகரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.