லக்னோவில் முலாயம் சிங் யாதவ் மகன் கைது: கட்சியினர் அதிர்ச்சி
லக்னோ: சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மகன் அகிலேஷ் யாதவ் இன்று காலை அமௌசி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் மாயாவதி அரசின் ஊழல் மற்றும் அட்டூழியத்தைக் கண்டித்து எதிர்க்கட்சியான சமாஜ்வாடி 3 நாள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. போராட்டத்தின் கடைசி நாளான இன்று ஆளும் அரசுக்கு எதிரான போராட்டத்தை தலைமை தாங்கச் சென்ற அகிலேஷ் கைது செய்யப்பட்டார்.
போராட்டத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று சுமார் 3 ஆயிரம் சமாஜ்வாடி கட்சியினர் கைது செய்யப்பட்டனர். அன்று காலையிலேயே முலாயம் தன்னையும், தனது மகனையும் வீட்டுக் காவலில் வைத்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். எங்களை லக்னோவிற்குச் செல்லவிடாமல் தடுப்பதற்காகவே இவ்வாறு செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
எங்கள் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. நானும், அகிலேஷும் லக்னோவில் மக்களவையில் கலந்து கொள்ள முடியாதவாறு தடுத்துள்ளனர். இந்த அரசு எங்களை மக்களவைக்குச் செல்ல அனுமதிக்கவில்லை என்றார்.
முன்னதாக அவர் வீட்டுச் சிறை குறித்து சபாநாயகர் மீரா குமாருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் இந்த விவகாரத்தை மக்களவையில் எழுப்பப்போவதாக தெரிவித்திருந்தார்.