கரூரில் மீண்டும் போட்டியிட அதிமுக எம்.எல்.ஏ பாலாஜி செந்தில் கடும் முயற்சி
கரூர்: அதிமுகவில் கரூர் சட்ட மன்ற தொகுதி வேட்பாளராக தற்போது உள்ள செந்தில் பாலாஜி மீண்டும் இடம் பிடிப்பாரா என பட்டிமன்றம் வைக்காத குறையாக விவாதம் நடந்து வருகிறது.
கரூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும், கரூர் தொகுதி சட்ட மன்ற தொகுதி உறுப்பினராகவும் இருப்பவர் செந்தில் பாலாஜி.
கடந்த சட்ட மன்ற தேர்தலின் போது தன்னை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட மாவட்டச் செயலாளர் வாசுகிமுருகேசனை குறைந்த வித்தியாசத்தில் தோல்வியடைச் செய்தார். இதனால் கரூரில் இவரது புகழ் பன்மடங்காக பெருகியது.
இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் திமுக புள்ளிகள் சிலருடன் செந்தில் பாலாஜிக்கு நெருக்கும் உள்ளது என போயஸ் கார்டன்வரை புகார்கள் சென்றுள்ளதாம்.
ஆனால், கரூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக உள்ள எம்.பி. தம்பித்துரை இது குறி்த்து எதுவும் கூறவில்லை.
இந்த நிலையில், கரூர் தொகுதிக்கு நேர்காணல் இன்று அல்லது நாளை அல்லது அடுத்த நாள் நடைபெறலாம் என கூறப்படுகின்றது. நேர்காணலுக்கு செல்ல கரூர் எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி , தாந்தோனி ஓன்றியச் செயலாளர் விஜய பாஸ்கர், கரூர் மாவட்ட பொருளார் முரளி, சுதாகர் ஆகிய 4 பேர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதில் ஒருவர் பெயர் மட்டும் கரூர் தொகுதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.