அதிக சம்பளம் கேட்டு ஏர் இந்தியா விமானிகள் நாளை முதல் ஸ்ட்ரைக்!!

விமானிகளின் சம்பளப் பிரச்சினைக்கு ஏர் இந்தியா நிர்வாகம் எந்தத் தீர்வையும் முன் வைக்காததால் நாங்கள் இந்த ஸ்ட்ரைக்கை அறிவித்துள்ளோம் என விமானிகளின் சங்கம் அதிகாரப்பூர்மாக இன்று அறிவித்துள்ளது. ஸ்ட்ரைக் நோட்டீசையும் ஏற்கெனவே முறைப்படி நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த ஸ்ட்ரைக் கடந்த மார்ச் 9-ம் தேதியே நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விமானப் போக்குவரத்து அமைச்சர் வயலார் ரவி கேட்டுக் கொண்டதால் ஒத்திப் போட்டிருந்தனர். அப்படியும் கூட எந்தவொரு இணக்கமான முடிவும் எட்டப்படாததால் நாளை வேலை நிறுத்தம் செய்வதில் உறுதியாக உள்ளனர்.
இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களை ஒன்றாக இணைத்த போது, இரு நிறுவன ஊழியர்களின் சம்பளமும் தக்க அளவில் உயர்த்தப்படும் என்று அரசு உறுதி அளித்து ஒப்பந்தமும் கையெழுத்தானது. ஆனால் இப்போது சம்பள உயர்வு ஏதும் இல்லாத நிலையில், இரு நிறுவனங்களின் விமானிகளுக்கும் ஒரே சம்பளம்தான் வழங்கப்படுகிறதாம்.
இதனைக் கண்டித்தும், உடனடி சம்பள உயர்வு கேட்டும் இந்த காலவரையற்ற ஸ்ட்ரைக் நடக்கிறது.
ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து இரு ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 2008-2009-ல் இந்த நிறுவனம் ரூ 7,189 கோடி நஷ்டக் கணக்கு காட்டியது. 2009-2010-ல் இந்த நஷ்டம் ரூ 5,551 கோடியாக குறைந்தது. ஆனால் இன்னும் லாபத்தில் இயங்கியபாடில்லை!












Click it and Unblock the Notifications