எங்குமே போக முடியாதபடி செய்து விட்டார் ஜெ.-கார்த்திக் விரக்தி
தமிழகத்தின் 'ஒயிட் காலர்' அரசியல்வாதிகளில் ஒருவர் கார்த்திக். படு ஸ்டைலாக கூலிங் கிளாஸை போட்டுக் கொண்டு ஜஸ்ட் லைக் தட் பிரசாரம் செய்து பிரமிப்பை ஏற்படுத்தியவர் கார்த்திக். வியர்க்க விறுக்க ஒருபோதும் இவர் கட்சிக்காக உழைத்ததில்லை. கூட்டம் அதிகம் சேர்ந்து விட்டால் கார்த்திக்குக்கு அலர்ஜியாகி விடும். அதுவும், இவரது கூட்டங்கள் மட்டும் எப்போதும் கலாட்டாக்கள், ரகளையுடன் நடப்பது அலாதியானது.
இதுபோக ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டணியாக கலக்கி வருபவர் கார்த்திக். யாருக்கும், எந்தக் கட்சிக்கும், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத நல்ல அரசியல்வாதி கார்த்திக்.
கடந்த லோக்சபா தேர்தலின்போது பாஜகவுடன் கூட்டணி வைத்து 2 இடங்களில் போட்டியிட்டார். பல இடங்களில் இவரது கட்சி சார்பில் போட்டியிட்டவர்கள் திடீரென மாயமாகி, பின்னர் திரும்பி வந்து அசரடித்தனர்.
தற்போதைய சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் கார்த்திக். ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து கூட்டணியில் இணைவதாக தெரிவித்தார். கூடவே தொகுதிகள் கேட்டும் கோரிக்கை வைத்தார்.
ஆரம்பத்தில் நிறைய தொகுதிகளை கேட்ட கார்த்திக் கட்சி கடைசியாக 3 சீட்களாவது தர வேண்டும் என்று கோரியிருந்தது. ஆனால் ஒரு சீட் மட்டுமே தருவதாக கூறிய அதிமுக, பின்னர் அதையும் கூட விட்டு விட்டது. அதாவது வெறும் ஆதரவு மட்டுமே போதும் என்று கூறி விட்டதாக கூறப்படுகிறது.
மேலும், அதிமுக தரப்பிலிருந்து எந்தத் தகவலையும் காணவில்லை. அதேசமயம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கினார் ஜெயலலிதா. இது கார்த்திக் கட்சிக்கு பெரும் கெளரவக் குறைச்சலாகப் போய் விட்டது.
உடனடியாக கூட்டணியிலிருந்து விலகி தன்மானத்துடன் தனித்துப் போட்டியிடுவோம் என்று கார்த்திக்கை அவரது கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தினர். தொண்டர்களின் உணர்வுகளை மதிப்பதாக கார்த்திக்கும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று கூட்டணியிலிருந்து விலகும் முடிவை அவர் அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் சட்டசபைத் தேர்தலில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் தருமாறு கேட்டோம். ஆனால் இதுவரை அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இது எங்களது கட்சியை அவமானப்படுத்தும் செயல்.
பேச்சுவார்த்தை என்று கூறி எங்களை நீண்ட காலம் காத்திருக்க வைத்து விட்டார்கள். ஆனால் எத்தனை காலம் காத்திருப்பது. எங்களுக்கு வேறு எந்த ஆப்ஷனுமே இல்லாமல் பண்ணி விட்டார்கள். இப்போது வேறு கூட்டணிக்கும் நாங்கள் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் நல்ல கூட்டணி அமைந்தால் அதி்ல் சேர நாங்கள் தயாராகவே உள்ளோம். அதேசமயம், கைவிட்டவர்கள், கைவிட்டவர்கள்தான். கை கொடுப்பதற்கு யாரும் இல்லை. எனவே நாங்களே எங்களுக்குக் கை கொடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
கூட்டணியிலிருந்து நாங்கள் விலகி விட முடிவு செய்துள்ளோம். இந்த முடிவை நாங்கள் அதிமுக தலைமைக்குத் தெரிவிப்போம்.
வருகிற தேர்தலில் 25 முதல் 30 தொகுதிகள் வரை தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம். சில தொகுதிகளில் ஏற்கனவே பணிகளையும் தொடங்கி விட்டோம் என்றார் கார்த்திக்.