வாக்களிக்க எம்பிக்களுக்கு பணம் கொடு்த்த அரசு: நாடாளுமன்றத்தில் அமளி
டெல்லி: கடந்த 2008-ம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்த எம்பிக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தியையடுத்து பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் கேபிள் செய்தி வெளியாகியுள்ளது. இந்த பிரச்சனையை மக்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா எழுப்பினார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இந்திய ஜனநாயக வரலாற்றில் வாக்களி்கக எம்பிக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக இதுவரை செய்தி வெளியானதே இல்லை. இது ஜனநாயகப் படுகொலை ஆகும்.
இந்த குற்றச்சாட்டை பிரதமர் மன்மோகன் சிங் மறுக்கவில்லையெனில் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், இது இந்திய ஜனநாயகத்திற்கே பெருத்த அவமானம். இதுவரை நேர்மையான பிரதமர் என்று பெயரெடுத்தவர் ஆட்சியில் நடந்துள்ள விவகாரங்கள் எல்லாம் தற்போது தான் வெளிசத்திற்கு வருகின்றன. 2008-ம் ஆண்டில் 3 பாஜக உறுப்பினர்கள் லஞ்சப் பணத்தை இதே நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து காட்டியபோது அப்போதைய சபாநயகர் அதை கண்டுகொள்ளாமல் அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்த சம்பவத்தால் பதவியில் நீடிக்கும் உரிமையை அரசு இழந்துவிட்டது. எனவே, பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க சபாநாயகர் அனுமதிக்க வேண்டும் என சமாஜவாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கேட்டுக்கொண்டார். அப்போது எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் கோஷங்கள் எழுப்பியதால் அவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை கூடியதும் மீண்டும் அமளி ஏற்பட்டதால் அவை மாலை 6 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களையிலும் அமளி ஏற்பட்டதால் அங்கும் அவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.